15 லட்சம் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பேட்டி|ஹெச்.ராஜா பதவி விலகுவாரா ?

- 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தால் 100 நாட்களில் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரப்படும். அவ்வாறு மீட்கப்படும் பணத்தைக் கொண்டு இந்தியாவின் எளிய மக்களின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிய சில மாதங்களே உள்ள நிலையில் கருப்பு பண மீட்பு பற்றியும், வங்கியில் 15 லட்சம் செலுத்துவது குறித்தும் மக்களும், எதிர் கட்சியினரும் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 15 லட்சம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பேட்டி இந்திய அளவில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநில இஸ்லாம்பூரில் டிசம்பர் 18-ம் தேதி மாநில சமூக நீதி மற்றும் அதிகாரத்தின் அமைச்சரான ராம்தாஸ் அத்வாலே-யிடம் 2014 தேர்தலில் நரேந்திர மோடி அளித்த கருப்பு பணம் மீட்புப் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மராத்தி மொழியில் பதில் அளித்தார்.
“ 15 லட்சம் ரூபாய் ஒரே தடவையாக வராது, ஆனால், மெதுவாக சிறிது சிறிதாக வரும். அரசிடம் அதிக அளவில் பணம் இல்லை. ஆர்.பி.ஐ-யிடம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுக்கின்றனர்.. ஏதோ தொழில்நுட்ப பிரச்சனைகள் எனக் கூறுகின்றனர். ஆனால், நரேந்திர மோடி திறன்பட செயல்படும் பிரதமர் மற்றும் மக்களின் பல பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளார் “ என தெரிவித்தார்.
சென்ற ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், “ ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படுவது “ குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தின் சார்பில் குறிப்பிட்ட முறையான பதில் ஏதும் அளிக்கப்படவில்லை.
ஜூன் 2018-ல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக எங்கும் கூறவில்லை எனக் கூறினார். மேலும், அவ்வாறு கூறியதை நிரூபித்தால் தாம் வகிக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பேட்டி அளித்து இருந்தார்.
தற்போது பாஜகவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே 15 லட்சம் ஒரே நேரத்தில் அளிக்க முடியாது, சிறிது சிறிதாக அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார். ஆக, பிரதமர் வாக்குறுதி அளிக்கவில்லை என்றால் ஒரு மத்திய அமைச்சர் இப்படி ஒரு பதில் அளிக்க அவசியமில்லை தானே.
மத்திய அமைச்சர் 15 லட்சம் அளிக்கப்படும் என்றுக் கூறியது சாத்தியமில்லாத ஒன்று என அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால், இங்கோ பிரதமர் வாக்குறுதிகளே அளிக்கவில்லை என சவால் விட்ட ஹெச்.ராஜா விடுத்த சவாலின்படி தன் பொறுப்புகளில் இருந்து விலகுவாரா என பலருக்கும் கேள்வி எழுகிறது.
Minister Ramdas Athawale’s Rs 15-lakh self goal: It will come, slowly
Rs 15 Lakh In Each Account Will Happen, Says Minister. “Not All At Once
Ndtv – 15 Lakh In Each Account Will Happen, Says Minister, “Not All At Once”