2000 ரூபாய் நோட்டுக்கு ஜனவரி முதல் தடையா ?

அவசர செய்தி !! ஜனவரி 1-ம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதனை முன்னிட்டு 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக் கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூ50,000 மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே, தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றிக் கொள்ளுங்கள். 10 தினங்களுக்கு பின் மாற்ற இயலாது. இந்த செய்தி வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரல்.
2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த உடன் புதிதாக 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. மதிப்பு அதிகம் என்பதால் புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு முதலில் சிரமமாக இருந்தது. மேலும், இந்த நோட்டும் எப்பொழுது வேண்டுமாலும் தடை செய்யப்படலாம் என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்து வந்தன.
இந்நிலையில், வருகிற 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக பரவிய செய்தியால் மக்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால், தற்போது அவ்வாறான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கியோ, மத்திய அரசோ வெளியிடவில்லை என்பதே உண்மை.
வதந்தியும் & பதில்களும் :
2017-ல் ஆகஸ்ட் மாதத்தில் 2000 நோட்டுகள் திரும்ப பெறப் போகிறார்கள் என பரவிய செய்திக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
“அஸ்ஸாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 2000 நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள இருப்பதாக கூறுவது முழுவதும் வதந்தி “ என மாநில உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ராஜ்ய சபாவில் பதில் அளித்து இருந்தார்.
அதே ஆண்டில் நாடாளுமன்றத்தில் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்த எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுத்து வடிவில் பதில் அளித்து இருந்தார்.
2017-ல் 2000 ரூபாய் நோட்டுகளின் அச்சிடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவை தடை செய்யப் போவதாக செய்திகள் பரவின. ஆனால், புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அதிகம் அச்சிடுவதற்காகவே தற்காலிகமாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை நிறுத்தி வைத்தனர்.
2018 ஆகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் மீண்டும் அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “ அவ்வாறான திட்டம் ஏதுமில்லை “ என பதில் அளித்து இருந்தார்.
இரு ஆண்டுகளில் பல முறை 2000 ரூபாய் நோட்டுகள் தடை விதிக்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளன. மத்திய அரசு தரப்பில் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வாய்ப்பில்லை என்றே குறிப்பிடப்படுகிறது.
2018 செப்டம்பர் 19-ல் வெளியான Business Today செய்தியில், ” ஆர்.பி.ஐ புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகளை துவங்கி விரைவில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், இது தொடர்பாக இன்றுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை ” என குறிப்பிட்டுள்ளனர்.
ஒருமுறை பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய நோட்டுக்களை மாற்ற மக்கள் அனுபவித்தச் சிரமங்கள், அதனால் அரசு மீதான மக்களின் வெறுப்பு போன்றவையால் மத்திய அரசு எதிர் விளைவை சந்தித்தது.
இன்னும் சில மாதங்களில் 2019 நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் மீண்டும் பணமதிப்பிழப்பு சாத்தியமில்லை. பெட்ரோல் விலை உயர்வை கூட யோசித்து தான் செய்வார்கள்..!
Demonetisation again? There are signs of another currency ban coming
No plans to demonetise Rs 2,000 notes: Government
No proposal to withdraw Rs 2,000 notes: Government
Reserve Bank of India may issue the all-new Rs 1,000 note by December