2013ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்களின் தொகுப்பு !
அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. 2022ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் இறக்குமதியில் விலை, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாமானிய மக்களின் தினசரி செலவாணிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் மோடி அரசாங்கத்திற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு மௌனம் காத்தே வருகிறது.
2014 முன்பாக பாஜக எதிர்க்கட்சியாக இருந்த தருணத்தில், காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் விமர்சித்திருந்தனர். அதன் தொகுப்பை இங்கே காண்போம்.
நரேந்திர மோடி :
நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது 2013ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு டெல்லியில் இருந்து ஆளும் அரசின் ஊழல்கள் தான் காரணம்” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், 2013 ஆகஸ்ட் மாதம் மோடி, “ஆளும் காங்கிரஸ் அரசு ரூபாய் மதிப்பு வீழ்வதைப் பற்றிக் கவலைப்படாதது நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தங்களது இருக்கையைப் பாதுகாப்பது குறித்து மட்டுமே அவர்கள் கவலைப்படுகிறார்கள்” எனப் பேசியிருந்தார்.
மேலும், “ஒரு காலத்தில் நமது ரூபாய் மதிப்புப் பயங்கரச் சத்தத்தை எழுப்பிகொண்டு இருந்தது. ஆனால் தற்பொழுது நம் பிரதமர் மன்மோகன் சிங் போல ரூபாய் மதிப்பும் அமைதியாகிவிட்டது” என வேறொரு தருணத்தில் கூறியிருந்தார்.
ஸ்மிருதி இரானி :
தற்போதைய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி 2013-ல் தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன ஊடுருவல், பெட்ரோல் விலை ஏற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, 60% இந்தியர்கள் உணவிற்காக போராடும் போது, இதை மறைக்க காங்கிரஸ் மதசார்பின்மைக் குறித்துப் பேசிவருகின்றது” எனப் பதிவிட்டிருந்தார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் :
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 2014-ல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மோடி ஆட்சி அமைத்தவுடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ40-க்கு வந்துவிடும் என நினைக்கையில் புத்துணர்ச்சி அளிக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆனால், 2016ல் பாஜக ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில், இதுபோல் நான் ஏதும் கூறவில்லை ” என பின்வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்தான் ஆஸ்திரேலியாவின் பெயர் மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது என ஒரு வதந்தியை பரப்பினார். அது பற்றி இங்கே வாசிக்கவும் : “ஆஸ்திரேலியா நாட்டின் பெயர் மகாபாரதத்தில் இருந்து வந்ததா ? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியப் பொய் !”
அமிதாப் பச்சன் :
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கிண்டல் செய்யும் விதமாக 2013ல் நடிகர் அமிதாப் பச்சன், “ஆங்கில அதிகாரத்தில் “Rupeed” எனப் புதிதாக ஒரு வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பொருள் கீழே விழுவதாகும்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பாலிவுட் பிரபலங்கள் :
“பெட்ரோல் விலை அதிகரிப்பது போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும், ரூபாய் மதிப்பு வீழ்வது போலக் கஷ்டங்களும் குறையட்டும், நாட்டில் ஊழல் நிறைந்திருப்பியது போல வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்” என இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி 2012ல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர்தான் ” தி காஷ்மீர் பைல்ஸ் ” திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதே திரைப்படத்தில் நடித்த அனுப்பம் கேர், “இந்தியாவில் ரூபாயின் மதிப்பு விரைவில் மூத்த குடிமகனாக அறிவிக்கப்படும்” என 2012ல் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
எழுத்தாளர் சேத்தன் பகத் தனது ட்விட்டரில், “ டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 60ரூ-யை நெருங்குகிறது. ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி குறித்து ஆளும் அரசு வாய்திறக்காமல் உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
“டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 61.59 எனப் புதிய வீழ்ச்சியைத் தொட்டுள்ளது” எனப் பத்திரிகையாளர் சுதிர் சவுதாரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க : வைரலாகும் 2012ல் பெட்ரோல் விலை உயர்விற்கு பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்கள் !
2013ல் 68.68ரூ என்ற உச்சத்தைத் தொட்டிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2014ல் மோடி அரசாங்கம் பதவியேற்கும் போது 58.43ரூ எனக் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் வீழ்ச்சி குறித்துக் கடுமையாக விமர்சித்த பிரபலங்கள் அனைவரும் தற்பொழுது வரலாறு காணாத அளவு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது குறித்து மௌனமாக இருந்து வருகின்றனர்.