8 பேர் உயிர் பறித்த புத்தாண்டு
2019 வருடத்தை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு என்றாலே மது அருந்துவது, வாகனங்களில் அதிவேகமாக செல்வது மட்டுமே இன்று அதிகரித்து உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருப்பதால் இந்த ஆண்டு 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
போலீசாரால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முன்பை விட அதிகளவில் ஏற்படுத்தியும் வாகன விபத்துகள் அதிகம் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 31, 2018 இரவு முதல் 2019 ஜனவரி 1-ம் தேதி வரையில் மட்டும் 18 அபாயகரமான விபத்துகள் நிகழ்ந்து 8 பேர் உயிரிழந்து உள்ளனர். கோயம்புத்தூரில் புத்தாண்டின் போது 3 பேர் உயரிழந்துள்ளனர்.
சென்னையின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 34 சாலை விபத்து உள்பட 44 அதிர்ச்சியான சம்பவங்கள் பதிவாகின. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 140 நோயாளிகளில் 106 பேர் சாலை விபத்தில் அடிபட்டவர்கள்.
இதைத் தவிர கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 12 தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள், 53 சாலை விபத்துகள், 39 பேர் விழுந்ததில் காயமடைந்ததால் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேலும், புத்தாண்டு தினத்தன்று 2 தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளன.
2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொண்டாட்டம் என்பதால் இளைஞர்கள் குடித்து விட்டு வாகனத்தில் செல்வதும், மகிழ்ச்சிக்காக வாகனங்களில் அதி வேகமாக சென்றால் நூற்றுக்கணக்கான விபத்துகள் 2019 புத்தாண்டு தினத்தில் அரங்கேறியுள்ளது.
சாதாரண நாட்களில் வரும் அவசர சிகிச்சைக்கான நோயாளிகளின் எண்ணிக்கையை விட 20% அதிகமான நோயாளிகள் புத்தாண்டு தினத்தில் சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையில் 108 ஆம்புலன்ஸ்க்கு வந்த 880 அழைப்புகளில் 130 அழைப்புகள் சாலை விபத்து தொடர்பானவையே.
புத்தாண்டு தினத்தில் சென்னையில் மட்டும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக 263 பேர் மீதும், வாகனத்தில் வேகமாக சென்றதற்காக 33 பேர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2019 புதிய வருடத்தின் தொடக்கத்தில் 8 பேர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த புத்தாண்டில் 8 பேரும், 2017 -ல் 10 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்தனர். இவையெல்லாம், சென்னையின் நிலவரம்.
Over 200 treated for injuries at government hospitals
Eight killed in 130 road accidents in Chennai New Year revelry