This article is from Oct 10, 2018

சென்னைக்கு ஆபத்து 100 ஆண்டுகளில் இல்லாத மழை? : Weather Man விளக்கம்

கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தை விட இரு மடங்கு அதிக மழை தமிழகத்தில் பொழிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளதாக தமிழ் இணையப் பக்கம் ஒன்றில் செய்தியாக வெளியிட்டு உள்ளனர்.

அதில், சென்னை மற்றும் கடலூருக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக கோவை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாகவும், சென்னையில் 306 இடங்கள் மழையால் பாதிப்படையும் என பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் தமிழகத்தில் கனமழை பொழியுமா ? சென்னை நகரம் மீண்டும் மழை , வெள்ளத்தால் பாதிப்படையுமா என Tamilnadu Weather man அவர்களிடம் Youturn சார்பில் நடத்திய உரையாடலில் மக்களுக்கு தேவையான புரிதலை எடுத்துரைத்துள்ளார்.

கேள்வி : 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் தமிழகத்தில் அதிகளவில் கனமழை பொழியும் என கூறுகிறார்களே ?

Weather man பதில் : தமிழகத்தில் சராசரி மழை பொழிவான 440 mm-ஐ விட 10 சதவீதம் கூடுதலாக 480 mm அளவிற்கு மழை பொழிய உள்ளதாக கூறியுள்ளார்கள். இவை குறிப்பிட்ட இடத்திற்கு(சென்னை) என்று அர்த்தம் இல்லை. தமிழகத்திற்கான மொத்த அளவே. இது பெரிய அளவிலான முன் அறிவிப்பு இல்லை. அவர்கள் கூறியது போன்று எங்கும் நடக்க வாய்ப்பில்லை.

கேள்வி : கோவை வானிலை ஆய்வு மையம் தான் இம்மாதிரியான தகவல் கூறியுள்ளதாக குறிபிட்டுள்ளனரே

Weather man பதில்: சென்னையில் சராசரி மழை மற்றும் கடலூரில் குறைவான மழை, நாகையில் சராசரி மழை என கோவை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளனர். அனைவரும் சராசரி மழையே பொழியும் என்றுள்ளார்கள். 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மழை பொழியும் என்று யாரும் எங்கும் குறிப்பிடவில்லை.

கேள்வி : வானிலை பற்றி தவறான தகவல்கள் பதிவிடுபவர்கள் பற்றி ?

Weather man பதில்: இம்மாதிரியான பதிவுகள் அவர்களின் விளம்பரத்திற்காக, மக்களை ஈர்ப்பதாக செய்கின்றனர். எந்த ஒரு மாடலும் 100 சதவீதம் நடக்குமா என்று கூறாது. ஒவ்வொரு பகுதிக்கும் எந்த அளவு மழை பொழியும் என்று உறுதியாக கூற முடியாது.

எனினும், தற்போது தமிழகத்திற்கு நல்ல மழை உள்ளது. இந்த மழை சென்னை, கோவை, கடலூர், நாகப்பட்டினம் என குறிப்பிட்ட பகுதிக்கு என்று கூற முடியாது. மழை நிகழ்வு வந்த பின்னரே அது பற்றிய தகவலை உறுதியாக கூற முடியும். எந்தவொரு weather models-களும் 100 ஆண்டுகளுக்கு பிறகு அதிகளவில் மழை பொழியும் என்று தெரிவிக்கவில்லை. அவ்வாறு கணிக்க டெக்னாலஜி ஏதுமில்லை.

கேள்வி : சென்னையில் கனமழை பொழிந்து வெள்ளம் வர வாய்ப்பு உள்ளதா ?

Weather man பதில்: வெள்ளம் என்பது வேறு. மழை என்பது வேறு. வெள்ளம் வருவதற்கு ஏரிகள் நிரம்பி இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள ஏரிகள் வறண்டு உள்ளன. 10 சதவீத தண்ணீரே உள்ளது. சென்னை மெட்ரோ வாட்டரில் லேக் லெவெல்ஸ் என்ன என்று பார்க்கவும் எங்கேயும் தண்ணீரே இல்லை. நமக்கு மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள ஏரிகளில் தான் தண்ணீர் உள்ளது. ஆனால், அங்கு வடகிழக்கு பருவ மழையில் அதிக மழை பொழியாது. கிழக்கு பகுதியான சென்னை, கடலூர், நாகை பகுதிகளில் தண்ணீர் குறைவு.

எப்பொழுதும் தென்மேற்கு பருவ மழையால் இங்குள்ள நீர்நிலைப் பகுதிகள் நிறையாது. ஆக, முதலில் நீர்நிலைகளிலே தண்ணீர் இல்லை, பிறகு எவ்வாறு ஏரிகள் நிறைந்து வெள்ளம் வரும் என கூற முடியும். மழை பொழிந்து குடிப்பதற்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகுமா என்பதை விடுத்து எதற்கு நேரடியாக வெள்ளம் பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் சராசரியாக நல்ல மழை பொழிவு இருக்கும் என்று கூறலாமே தவிர 100 ஆண்டுகளுக்கு பிறகு அதிக கனமழை பொழிந்து வெள்ளம் உருவாகும் என்று கூறுவது எல்லாம் தவறான தகவல்கள். அவ்வாறு தவறான கணிப்புகளை யார் வேண்டுமானாலும் எந்த ஆதாரம் இன்றியும் கூறி விடலாம். ஆதாரம் இல்லாத தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். முதலில் நல்ல மழை பொழிந்து தண்ணீர் தேவை பூர்த்தி ஆகினால் போதும்.

100 சதவீதம் அளவிற்கு மழை, வெள்ளம் பற்றி முன் கணிப்பு செய்யும் டெக்னாலஜிஸ் எங்கும் இல்லை என்று விடையளித்துள்ளார் Tamilnadu Weather man.

Please complete the required fields.




Back to top button
loader