வேளாண் திருத்த சட்டங்கள் அதானிகள் வாழ்வதற்காகவா ?| விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

” விவசாயிக்கு யார் பேச ?” எனும் தலைப்பில் வேளாண் மசோதா மற்றும் அதானியின் நிறுவனத்தால் ஜார்க்கண்ட் பழங்குடியினருக்கு நிகழ்ந்த சமகால பாதிப்புகள் குறித்து யூடர்ன் ஆசிரியர் திரு.ஐயன் கார்த்திகேயன் பேசிய வீடியோவின் ஆதாரத் தொகுப்பாக இக்கட்டுரையை எழுதி உள்ளோம்.
மத்திய அரசின் வேளாண் மசோதா 2020 தற்போது சட்டமாகவும் இயற்றப்பட்டு விட்டது. அதிலுள்ள பிரச்சனைக் குறித்து கேள்விப்பட்டு இருப்பீர்கள். அச்சட்டத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளை பேசுவோம். அவற்றில் முக்கியான பிரச்சனை என்னவென்றால், வர்த்தகம் மற்றும் வர்த்தக கொள்கைகளை குறித்து சில விசயங்கள் பேசப்பட்டு வருகிறது. அதில், மத்திய அரசின் மீதோ அல்லது மாநில அரசின் மீதோ வழக்குகளோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்க வாய்ப்பில்லை என இந்த சட்டம் கூறுகிறது.
எப்படி என்றால், இது நல்ல எண்ணத்தில்(Good Faith) என பரிந்துரை செய்து விட்டாலே நாம் அங்கு வழக்குத் தொடுக்க இயலாது எனச் சொல்கிறார்கள். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் மீது மட்டுமல்ல யார் மீதும் வழக்குத் தொடுக்க கூடாது எனக் சட்டம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக, ” எந்தவொரு வழக்கையும் தொடர எந்தவொரு சிவில் நீதிமன்றத்திற்கும் தொடர்பே இல்லை ” எனச் சொல்கின்றனர். ஆக, எந்தவிதமான வழக்கை எதற்காகவும், யார் மீதும் போட முடியாது. இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதிலாவது, அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுக்கலாம் என வரையறை இருந்தது, இதில் அதுவும் இல்லை.
அடுத்ததாக, அரிசி, உருளைக்கிழங்கு, எண்ணெய், வெங்காயம் போன்ற மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் என வரையறுத்து உள்ளார்கள். அவற்றை பதுக்கி விலையை ஏத்தி விடக் கூடாது என்பதற்காவே இயற்றப்பட்ட சட்டத்தைத் திருத்துகிறார்கள். தானியங்கள், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் விதைகள் உள்ளிட்டவைகளை அத்தியாவசியப் பொருட்கள் அல்லாதவை என திருத்தம் செய்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக, போர், வறட்சி போன்ற அவசர காலங்களில் கடுமையாக விலையேற்றம் இருக்கும் போது ஏற்றுமதி மற்றும் சேகரித்து வைக்கக் கூடாது எனத் தடை இருந்து வருகிறது. அதை, தோட்டக்கலை உற்பத்தி செய்யும் பொருட்களாக இருந்தால் 100% விலையேற்றம் இருக்க வேண்டும், சீக்கிரம் கெட்டுப்போகாத பொருட்களாக இருந்தால் 50% விலையேற்றம் இருந்தால் தான் மட்டுமே அமல்படுத்த முடியும் எனக் கூறுகிறார்கள். இதைத்தாண்டி, இந்த ஸ்டாக் வரம்பானது ஏற்றுமதியாளராக மற்றும் வல்யூ செயினில் பங்கேற்பவராக இருந்தாலும் பொருந்தாது. நீங்கள் ஏற்றுமதி செய்தாலும், செயல்முறையாளராக இருந்தாலும் ஸ்டாக் செய்து கொள்ள முடியும். இதனால் மக்களிடம் தேவை அதிகம் இருக்கும் போது பதுக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு மேலும் விலையேற்றத்தை சந்திக்க நேரிடும்.
இதற்காக காரணமாக அரசாங்கம் கூறுவது, குளிர் சேமிப்பு கிடங்கு போன்றவை இல்லாத காரணத்தினால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை, அவற்றில் தனியார் முதலீடு இல்லை, ஏனென்றால் அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்டத்தில் இருக்கும் கெடுபிடிக் காரணமாக தனியார் முதலீடு செய்வதில்லை எனக் கூறுகிறார்கள். அந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்ய ” Attract private investments ” எனத் திருத்தும் கொண்டு வருகிறார்கள்.
அதானி vs ஜார்க்கண்ட் மக்கள் :
EIA 2020 முதல் வேளாண் சட்டம் 2020 வரை வழக்கே தொடுக்கக் கூடாது என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக வழக்கு தொடுக்க முடியும் என பல்வேறு சட்டங்கள் இருந்த போது நாட்டில் என்ன நிகழ்ந்து இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான் இதனை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
அதானி பற்றி பலரும் அறிந்து இருப்பீர்கள். அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரியை எடுத்து இந்தியாவில் செயல்முறைகளை செய்து பங்காளதேஷ் நாட்டிற்கு 1600 மெகா வாட் மின்சாரத்தை விற்பனை செய்கிறார்கள். இதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் கோட்டா எனும் பழங்குடியினர் கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுகிறார்கள். அதற்கு அக்கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு விதமான எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், அந்த எதிர்ப்பை மீறியும் அங்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எப்படி கொண்டு வந்தார்கள் எனப் பார்ப்போம்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் வெளியூர்காரர்களுக்கு பச்சை நிற அட்டையும், உள்ளூர்காரர்களுக்கு சிவப்பு நிற அட்டையும் கொடுத்து இருக்கிறார்கள். அதன் மூலம் உள்ளூர்காரர்களை உள்ளே விடாமல் தடுத்து இருக்கிறார்கள் எனச் செய்திக் கட்டுரைகள், அங்குள்ள மக்களின் வீடியோக்களின் வாயிலாக அறிய முடிந்தது. அந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலும் கார்ப்பரேட் சமூக பொறுப்புகளை(சிஎஸ்ஆர்) பற்றி மட்டுமே பேசி இருக்கிறார்கள். மக்களின் கருத்துக் கேட்கும் கூட்டத்திலேயே இப்படி நடந்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி, அங்குள்ள மக்கள் தாக்கப்பட்டு உள்ளார்கள், அவர்களின் விளைநிலங்கள் மற்றும் பயிர் விளைந்து இருந்த நிலங்கள் கூட அடித்து பறித்து உள்ளார்கள். LARR சட்டத்தின் படி 80% மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அப்பகுதியில் இருந்து நிலத்தை எடுத்துக் கொள்ள முடியும். அந்த கிராமத்தில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் 84% மக்கள் ஆதரவு தந்து உள்ளார்கள் என நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே கிராமசபைக் கூட்டத்தில் திட்டம் வரக்கூடாது என தீர்மானமே நிறைவேற்றப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் 84% மக்கள் ஆதரவு தருவதாக கணக்கு காட்டி உள்ளனர்.
அரசு இணையத்தில் வழங்கும் தரவுகள் உண்மையா என ஆராய்ந்து தேடும் இந்தியா ஸ்பென்ட் எனும் செய்தி அமைப்பு எடுத்த பேட்டியில், திட்டத்திற்கு தங்கள் கிராமத்தில் ஆதரவு தெரிவித்ததாக கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூட கூறவில்லை.
Today we received a media inquiry from ABC’s @stephenlongaus who has written a number of stories about Adani. Stephen has often omitted facts provided to him by Adani to create a negative perception of our business. We have decided to share our response to his questions below. pic.twitter.com/Xz5gmb3JG1
— Adani Australia (@AdaniAustralia) July 8, 2020
சரி, அந்த திட்டத்தின் மூலம் கிராமத்தில், அம்மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தருகிறார்களா எனப் பார்த்தால் ஏமாற்றமே மிச்சம். திட்டத்தில் இருந்து கிடைக்கும் 25% மின்சாரத்தை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தருவதாக அந்நிறுவனம் ட்வீட் செய்து உள்ளது. ஆனால், சிறப்பு பொருளாதார மண்டலத்தில்(SEZ) ஆலை நிறுவப்பட்டு இருந்தால் அதையும் வழங்க தேவையில்லை. ஆகையால், 100% மின்சாரத்தை பங்களாதேஷ் நாட்டிற்கே விற்பனை செய்கிறார்கள் என பல்வேறு கட்டுரைகள் தெரிவித்து உள்ளன.
ஆக, அப்பகுதியை சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றி குறைந்தபட்ச பயன்பாட்டையும் கெடுத்து உள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுத்து பங்களாதேஷ் நாட்டில் விற்பனை செய்வதற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் தங்கள் நிலத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கடும் எதிர்ப்புகளை மீறி அதானியின் நிறுவனம் இயங்கியே வருகிறது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களிடம் இருந்து நிலத்தை வாங்கும் போது இழப்பீடாக அதற்கு இணையான மற்றொரு நிலம் அளிக்கப்பட வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், நீர்பாசனத்திற்காக திட்டம் என்றால் மட்டுமே அளிக்க வேண்டும் எனக் கூறிய கோட்டா அதிகாரிகள் இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிலங்களுக்கு பதிலாக நிலங்கள் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அது தவறாகவும், எந்த திட்டமாக இருந்தாலும் மாற்று நிலம் கொடுத்துதான் ஆக வேண்டும்.
இத்தனைச் சட்டங்கள் இருந்தும் கூட விவசாயிகள், நிலத்தை வைத்திருந்த பழங்குடி மக்களின் நிலைமையே இப்படி இருந்தால், சட்டமே இல்லை என்றால் இந்திய மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என சிந்திக்க வேண்டும்.
Proof links :
How Jharkhand govt broke law by taking fertile land from farmers for Adani
Dirty-Tricks-Coercion-Acquire-Land-Adani-Godda-Power-Plant
Adani to supply 1600-Mw power to Bangladesh from Jharkhand project
LARR Act – https://www.prsindia.org/sites/default/files/LARR%20Act%2C%202013.pdf
Adivasi Farmers in Godda, Jharkhand Resist Land Acquisition for Adani Power Plant
Adani Power Vs The People Of Jharkhand
Brief Summary and Basic information of the Project
THE FARMERS’ PRODUCE TRADE AND COMMERCE (PROMOTION AND FACILITATION) BILL, 2020
THE ESSENTIAL COMMODITIES (AMENDMENT) BILL, 2020