2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடுப் பிரிவு அதிமுகவிற்கு ஆதரவா ?.. நியமிக்கப்படாத நபரின் கடிதம் !
ஆளும் கட்சி திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், கூட்டணி அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகளும் விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை திருணாமுல் காங்கிரஸ் தமிழ் மாநிலத் தலைவர் கலைவாணன் நேரில் சந்தித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு திருணாமுல் காங்கிரஸின் தமிழ் மாநில பிரிவு முழு ஆதரவை தெரிவிப்பதாக ஆதரவுக் கடிதத்தை தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் வழங்கினார்” என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமியுடன் இருவர் உடன் நிற்பது போன்ற புகைப்படத்தை அதிமுகவைச் சேர்ந்த கிஷோர் K சாமி மற்றும் CTR நிர்மல்குமார் உட்பட அதிமுகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
So Trinamul congress is not party of Indi Alliance while they extend support to Aiadmk. Welcome to the right camp. https://t./tac7D8xGTW
— kishore k swamy (@sansbarrier) February 21, 2024
கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் முன்னிலையில் திருணாமுல் காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் திரு கலைவாணன் நேரில் சந்தித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு திருணாமுல் காங்கிரஸின் தமிழ் மாநில பிரிவு முழு ஆதரவை தெரிவிப்பதாக ஆதரவு கடிதத்தை தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் வழங்கினார்.… pic.twitter.com/b9lIAfZnJe
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) February 21, 2024
திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியை விட்டு விலகியதா ?
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தாலும், அவர் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ NDA கூட்டணில் இருந்து விலகியதோடு, ஆரம்பம் முதலே இந்தியா கூட்டணியையும் விமர்சித்து வருகிறார்.
எனவே பரவி வரும் செய்திகள் குறித்து திரிணாமுல் காங்கிரஸின், தமிழ்நாடு மாநில பிரிவு அலுவலகத்தை யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பதிலளித்து பேசிய அவர்கள், “தமிழ்நாட்டில் மாநிலத் தலைவர் பொறுப்பு இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கு முன்பு, சபிதா மாநிலத் தலைவராக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கலைவாணன் பொதுச்செயலாளராக இருந்தார். தற்போது கட்சியில் தமிழ்நாடு அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. தேசிய தலைமை இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை” என்று தெளிவுப்படுத்தினர்.
மேலும் இதுகுறித்து சமூக ஊடகங்களில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கணக்கை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் கடந்த 2021 அக்டோபர் 31 அன்று, 2021 இல் கலைவாணன் மற்றும் மாரியப்பன் என்பவர்கள் இணைந்து மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக போலியான ஆவணத்தை தயார் செய்து ஏமாற்றி வருவதாக அக்கட்சியினர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், “அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு சார்பில் அறிவிப்பு : கலைவாணனும், மாரியப்பனும் போலி ஆவணங்களை தயாரித்து, தேசிய தலைமையிலிருந்து தமிழ்நாடு அமைப்பு செயலாளராக, பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டதாக கூறி, தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு திரிணாமுல் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமது தமிழ்நாடு மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் முறைகேடாக நடந்து கொண்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள், சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான செய்தியில், அகில இந்திய திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக டாக்டர் சக்திகிரி நியமனம் செய்யப்பட்டார். விழாவிற்கு மாநில தலைவர் சபிதா தமிழினி தலைமை தாங்கி மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டாக்டர் சக்திகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார் ” என்றுள்ளது.
கடந்த ஆண்டு வரை மாநில தலைவராக சபிதா தமிழினி இருந்துள்ளார். தற்போது மாநில தலைவர் பதவியே இன்னும் நியமிக்கப்படவில்லை என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த கிஷோர் கே சாமி பரப்பும் தகவல்களும் முற்றிலும் தவறானவை. இது தொடர்பாக மம்தா பானர்ஜி தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.