கார், பைக் கழுவுறவங்களா அர்ச்சகர் ஆக்கினால்… வைரலாகும் வன்ம பதிவுகள் !
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி ஆணை வழங்கியது முதல் சமூக வலைதளங்களில் அது சார்ந்த விவாதங்களும், எதிர் கருத்துக்களும் குவிந்து கொண்டு இருப்பதை நம்மால் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், ” கார் பைக் கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான்டா நடக்கும் ” என கோவிலில் உள்ள சிலையின் மீது ஒருவர் ஹோஸ் மூலம் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
வைரல் செய்யப்படும் புகைப்படம் செய்தித்தாள் ஒன்றில் வெளியானது போல் இருப்பதால் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் புகைப்படத்தின் தொடக்கம் மற்றும் எப்போது வெளியானது என அறிய முடியவில்லை.
ஆகையால், கோவில்களில் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் பணி குறித்து தேடுகையில், 2021 ஜூலை 4-ம் தேதி மாலைமலர் செய்தியில், “வழிபாட்டுத்தலங்கள் நாளை திறப்பு: பூஜை பொருட்கள் கொண்டு வர தடை ” எனும் செய்தியில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்ற சிலை இருப்பதையும், கோவிலை தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் புகைப்படமும் வெளியாகி இருந்தது.
அந்த புகைப்படத்திற்கு கீழே, ” தண்டுமாரியம்மன் கோவிலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம் ” என இடம்பெற்று இருக்கிறது. எனினும், புகைப்படத்தின் தரம் குறைவாக இருப்பதால், அந்த புகைப்படம் குறித்து மேற்கொண்டு தேடுகையில் ஜூலை 3-ம் தேதி தினத்தந்தி செய்தியில் அதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
இரு புகைப்படத்தில் இருக்கும் கோவில் சிலை ஒன்றாகவும், தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் ஊழியரின் உடை, மாஸ்க், தோற்றம், ஹோஸ் அனைத்தும் ஒன்றாக இருப்பதில் இருந்து, இது ஜூலை மாதம் கோவில்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
இதுகுறித்து, கோவை தண்டு மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், நமது அழைப்பை எடுக்கவில்லை.
பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்ததால் என்பது குறிப்பிட்டு இப்புகைப்படத்தை பதிவிட்டு வைரல் செய்யப்படும் பதிவுகளில், திருப்பதி உள்ளிட்ட பிற மாநில கோவில்களில் கூட பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருந்து சிலைகள், கொடி மரத்தின் மீது கிருமிநாசினி, தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக, கோவில்களை சுத்தம் செய்கையில் ஹோஸ் மூலம் தண்ணீரை அடித்து சுத்தம் செய்வது பல கோவில்களில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், பிற சாதியினர் கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிறகு அவர்கள் கோவில் பணி செய்கையில் இப்படி தான் இருப்பார்கள் என சித்தரிக்க முயல்வதற்கு பின்னால் இருப்பது வன்மம் மட்டுமே !
Links :
Temples-and-shrines-open-tomorrow
tamil-news-temples–open-cn-tomorrow