உள்ளாட்சித் தேர்தலை யார் நடத்துகிறார்கள் என்றே தெரியாத அண்ணாமலை !

பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று 22-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், திமுக கட்சியினர் ஓட்டுக்கு பணம், பரிசு தருவதாகவும், கள்ள ஒட்டு போடுகிறார்கள், முறைகேடுகள் நிகழ்கின்றன என தமிழக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
திமுக அரசு தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.இந்தக் காணொளி, தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்!@ECISVEEP தன் கண்களை மூடிக் கொள்ளாமல் நாளையாவது விழிப்புடன் இருப்பார்களா?
— K.Annamalai (@annamalai_k) February 21, 2022
இதைத் தொடர்ந்து, ” திமுக அரசு தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள். இந்தக் காணொளி, தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்! @ECISVEEP தன் கண்களை மூடிக் கொள்ளாமல் நாளையாவது விழிப்புடன் இருப்பார்களா? ” என இந்தியத் தேர்தல் ஆணையத்தை டக் செய்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ECI does not have mandate to conduct Rural & Urban Local Bodies’ elections. These are conducted by separate authorities i.e. State Election Commissions under Article 243 K & 243 ZA of the Constitution of India. You may contact the concerned authority for your query/complaint. pic.twitter.com/wuC4i6fwBM
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) February 21, 2022
இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம், ” கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஆணை இல்லை. இவை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243k மற்றும் 243ZA-ன் கீழ் மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன. உங்கள் புகாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் ” என ட்விட்டரில் பதில் அளித்து இருக்கிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும், ” இந்திய அரசியலமைப்பின் 243k மற்றும் 243ZA-ன் படி, பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட வேண்டும் ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தலை நிர்வகிக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் பதிவிற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த பதிலால், ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை யார் நடத்துகிறார்கள் என்பது கூட தெரியாதா என ட்விட்டரில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.