This article is from Dec 28, 2021

அன்னபூரணி கைதா, அவரின் நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் தடை ?

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அன்னபூரணி என்ற பெயர் வைரலாகிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். ஆதிபராசக்தியின் வடிவமே ” அன்னபூரணி அரசு அம்மா ” எனக் கூறி கொள்ளும் அவருக்கு பூஜை செய்யும் வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கடந்த 2014-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியின் ” சொல்வதெல்லாம் உண்மை ” நிகழ்ச்சியில் திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக அரசு என்பவருடன் கலந்து கொண்டவர் என வீடியோ காட்சி வெளியாகியதை எடுத்து பதிவிட்ட உடன் சமூக வலைதளங்களில் பரபரப்பு கூடியது.

இதன் பிறகு அன்னபூரணி மீது அதிகளவிலான ட்ரோல், விமர்சனங்கள் எழுந்தன. அவருடன் இருப்பவர்களின் மூடநம்பிக்கை, தனிநபர் தாக்குதல் என சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவியதால் ஊடகங்களிலும் அன்னபூரணி குறித்து வெளியாக தொடங்கியது. யூடியூப் சேனல் ஒன்றும் அவரை வைத்து பிரத்யேக பேட்டி ஒன்றை வெளியிட்டு இருந்தது. இப்படி அவருக்கான விளம்பரம் சூடு பிடித்தது.

இதற்கிடையில், அன்னபூரணி புத்தாண்டு தினத்தில் ” அம்மாவின் திவ்ய தரிசனம் ” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகளை செய்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அன்னபூரணியின் நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும், அன்னபூரணியை காவல்துறை தேடி வருவதாவும், கைது செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிடத் தொடங்கினர். அதேநேரத்தில், எதற்காக இவரின் நிகழ்ச்சிக்கு மட்டும் காவல்துறை தடை செய்தது, பிற சாமியார்கள், கிறிஸ்தவ போதகர்கள், இஸ்லாமிய மதபோதகர்கள் இருக்கிறார்களே அவர்களின் நிகழ்ச்சிகளை தடை செய்வார்களா, தமிழக அரசு கைது செய்யுமா, அவர்களுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா எனத் தொடர் கேள்விகள் குவிந்து வருகிறது.

அன்னபூரணி கைதா ? 

அன்னபூரணி கைது எனப் பரவும் தகவல் குறித்து தேடிப்பார்க்கையில், அவர் மீது புகார் அளிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. புகாரே இல்லாதபட்சத்தில் எப்படி கைது செய்வார்கள்.

நிகழ்ச்சிக்கு ஏன் தடை ?

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கணிக்கணிப்பாளர் அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களிடம் பேசுகையில், ” அவரை கைது செய்யப்போவதாக பரவும் தகவல் தவறானது. எந்த புகாரும் இல்லாமல் எப்படி கைது செய்ய முடியும். ஜனவரி 1-ம் தேதி ரஞ்சித் என்பவர் நிகழ்ச்சிக்காக மண்டபத்தை புக் செய்து முன் தொகையும் கொடுத்து இருக்கிறார். ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாக கொரோனா வழிகாட்டுதலின்படி முறையான அனுமதியை பெற வேண்டும் என அவர்களுக்கு தெரிவிக்குமாறு மண்டப உரிமையாளர்களிடம் தெரிவித்து உள்ளோம் ” எனக் கூறினார்.

ஆக, அன்னபூரணியின் வீடியோக்கள் வைரலான காரணத்தினால் மட்டும் அவரது நிகழ்ச்சிக்கு பிரத்யேகமாக தடை விதிக்கப்படவில்லை. அவரை கைது செய்ய காவல்துறை துரத்தவும் இல்லை. அன்னபூரணியை கைது செய்யப்போவதாக பரவும் தகவல் வதந்தியே. வைரலான காரணத்தினாலேயே அன்னபூரணிக்கு மட்டும் தவறான விசயம் நடப்பது போன்று சமூகத்தில் பலரும் பொங்கி உள்ளனர்.

அப்டேட் : 

இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணி செயல்பட்டு வருவதாகவும், அவரை கைது செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader