பாபர் மசூதி இடிப்பிற்கு சந்தோஷப்பட்டேன்.. பத்ரி சேஷாத்ரி பதிவின் முழு காரணம் என்ன ?

கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ அதிகம் சந்தோஷப்பட்டேன் ” எனப் பதிவிட்டதாக கீழ்காணும் ட்வீட் ஸ்க்ரீன்சார்ட் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. 

பத்ரி சேஷாத்ரி ட்விட் :

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆர்வலர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் தலைவர்கள் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் ஒன்றரை லட்சம் கர சேவகர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி வன்முறையாக மாறி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நிகழ்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு அதை பற்றி பத்ரி சேஷாத்ரி ட்விட்டர் பக்கத்தில், ” பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ அதிகம் சந்தோஷப்பட்டேன் ” என 2010ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அந்த ட்வீட் பதிவு தற்போதும் உள்ளது. 

Archive link 

இந்த ட்வீட் பதிவு பற்றி பத்ரி சேஷாத்ரி அவர்களைத் தொடர்பு கொண்ட போது, ” அது என்னுடைய பதிவு தான். அந்த ட்வீட்டிற்கு முன்பும், பின்பும் உள்ள பதிவுகளையும் சேர்த்து படியுங்கள். அந்த பதிவுகளை நான் இன்னும் நீக்கவில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 2010 செப்டம்பர் 29ம் தேதி வெளியான பதிவுகளை தேடுகையில், ” அவரும் வேறு சிலரும், சங்கப் பரிவாரத்தைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். அங்கு போய் கலாட்டா செய்யலாம் என்றுகூட நினைத்தேன். பதிலாக மசூதி இடிப்பு ஆதரவுக் கூட்டம் ஒன்று நடத்தலாமா என்றுகூட யோசித்தோம். ஆர்.எஸ்.எஸ் பற்றி, வி.எச்.பி பற்றியெல்லாம் அப்போது ஒன்றும் தெரியாது. பாபர் மசூதி இடிப்பு குறித்து 1992 நினைவுகளை தட்டிப் பார்த்து எழுத முயற்சி செய்கிறேன். அப்போது நான் பாஜகவை ஆதிரித்தேன். தமிழகத்தில்கூட பாஜக ஆட்சி வரவேண்டும் என்று எழுதியிருந்தேன். அடப் பாவமே! என் கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்று எப்போது சொன்னேன். நான் 18 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்ததைச் சொன்னேன் ” என அவருடைய பல ட்வீட் பதிவு மற்றும் பதில்களை கிடைத்தன.

Tweet link 

இதன்பின்னர், ” 18 வருடங்களில் பல விஷயங்களில் கருத்துகள் மாற்றம் அடைந்துள்ளன. வருத்தம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அவை பற்றி எழுதியும் உள்ளேன். மசூதியோ, கும்மட்டமோ, mob கூடி, வெறிக் களியாட்டத்தில் ஈடுபட்டு ஒரு கட்டடத்தை உடைப்பதுதான் திகிலை ஏற்படுத்துகிறது. இப்ப காவி இல்லை ” என அடுத்தடுத்து சிலருடன் நடந்த உரையாடலுக்கு பதிலாக அளித்து இருக்கிறார்.

நம் தேடலில், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ அதிகம் சந்தோஷப்பட்டேன் என கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி பதிவிட்டதாகப் பரவும் ட்வீட் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 2010ல் வெளியானது தான்.

ஆனால், அவை பாபர் மசூதி இடிப்பு குறித்து 1992ல் அவரது நினைவுகளையும், நிலைபாட்டையும், உணர்ந்ததையும் ட்விட்டர் உரையாடலில் தெரிவித்து இருக்கிறார். 18 வருடங்களில் பல விஷயங்களில் கருத்துகள் மாற்றம் அடைந்துள்ளன என்றும், வருத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் கூட அவர் தொடர்ச்சியான உரையாடலில் பதிவிட்டு இருந்துள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader