பெங்களூர் வன்முறை: இந்துக் கோவிலைப் பாதுகாத்த முஸ்லீம்கள்- நடந்தது என்ன ?
பெங்களூரின் புலிகேசி நகர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆகாந்தா ஸ்ரீநிவாஸ் மூர்த்தி உறவினர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பதிவிட்ட பதிவு வடகிழக்கு பெங்களூரில் வன்முறை மூள்வதற்கு காரணமாகி அமைந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய் இரவு 8 மணி அளவில் புலிகேசி நகர் எம்எல்ஏ மூர்த்தி வீட்டின் முன்பும், மற்றொரு தரப்பினர் அந்த நபரின் பதிவு குறித்து புகார் தெரிவிக்க டிஜே ஹலி காவல் நிலையத்திற்கும் சென்றுள்ளனர். இஸ்லாம் மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பதிவிட்ட நபரின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர். பின்னர் கூட்டத்தினரின் ஆவேசம் வன்முறையாக மாறி காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மற்றொரு கும்பல் எம்எல்ஏ வீட்டிற்கு அருகில் உள்ள பல வாகனங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். வன்முறை சம்பவத்தில் டிஜி ஹலி மற்றும் கேஜி ஹலி ஆகிய காவல்நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. போலீசார் மீது வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்கள். வன்முறையை ஒடுக்க கண்ணீர் புகை, தடியடி நடத்திய போலீசார் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி உள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறையைச் சேர்ந்த 60 பேர் காயமடைந்து உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வன்முறை தொடர்பாக 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவதூறான பதிவை பதிவிட்ட எம்எல்ஏ-வின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பதிவு தற்போது நீக்கப்பட்டு உள்ளது. டிஜி ஹலி மற்றும் கேஜி ஹலி ஆகிய இரு காவல்நிலையப் பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், நகர முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை ஆணையர் கமல் பண்ட் தெரிவித்து உள்ளார்.
#WATCH Karnataka: A group of Muslim youth gathered and formed a human chain around a temple in DJ Halli police station limits of Bengaluru city late last night, to protect it from arsonists after violence erupted in the area. (Video source: DJ Halli local) pic.twitter.com/dKIhMjQh96
— ANI (@ANI) August 12, 2020
மறுபுறம், வன்முறை உருவான பிறகு டிஜே ஹலி காவல்நிலைய எல்லைக்குள் இருந்த இந்து கோவிலை மனித சங்கிலி அமைத்து முஸ்லீம் இளைஞர்கள் பாதுகாத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
” நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழ்கிறோம். எந்த மதத்திற்கும் எதிராக எங்களிடம் எதுவும் இல்லை. நாங்கள் எந்தவொரு தனிநபருக்கோ, எந்த சாதி அல்லது சமூகத்துக்கோ எதிராக போராடவில்லை. எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் மருமகன் எங்கள் நபியை அவமதித்ததால் மட்டுமே நாங்கள் நீதி தேடுகிறோம். அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது ” என மனிதசங்கிலியை அமைத்த நபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் மூர்த்தி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், ” முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும், அவர்களுக்கு தாம் ஆதரவு தருவதாகவும், சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றும் தெரிவித்து இருந்தார்.
ಡಿ.ಜಿ ಹಳ್ಳಿ ಪೊಲೀಸ್ ಠಾಣಾ ವ್ಯಾಪ್ತಿಯಲ್ಲಿ ಕಿಡಿಗೇಡಿಗಳು ಶಾಸಕ ಅಖಂಡ ಶ್ರೀನಿವಾಸ ಅವರ ಮನೆ ಹಾಗು ಪೋಲೀಸ್ ಠಾಣೆ ಮೇಲೆ ದಾಳಿ, ಗಲಭೆ ನಡೆಸಿರುವುದು ಖಂಡನೀಯ. ಈಗಾಗಲೇ ದುಷ್ಕರ್ಮಿಗಳ ವಿರುದ್ದ ನಿರ್ದಾಕ್ಷಿಣ್ಯ ಕ್ರಮ ಕೈಗೊಳ್ಳುವಂತೆ ನಿರ್ದೇಶನ ನೀಡಲಾಗಿದ್ದು ಸರ್ಕಾರ ದಾಂಧಲೆ ಹತ್ತಿಕ್ಕಲು ಎಲ್ಲ ರೀತಿಯ ಕ್ರಮ ಕೈಗೊಂಡಿದೆ. (1/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) August 12, 2020
” இத்தகைய ஆத்திரமூட்டல்களையும், வதந்திகளையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது. அமைதியை நிலைநாட்ட பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் ” என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார். அரசியல் தலைவர்கள் பலரும் வன்முறை சம்பவத்திற்கும், அதற்கு காரணமான பதிவிற்கும் கண்டனம் தெரிவித்ததோடு, மக்கள் அமைதி காக்க வேண்டும் என பதிவிட்டு உள்ளனர்.
சமூக வலைதளங்களில் மதம் குறித்த வெறுப்புணர்வு, அவமதிப்பான கருத்துக்கள் ஏராளமாய் வெளியாகி மக்களிடையே பிளவுகளும், மோதல்களும் உருவாவதை நம் கண்டு வருகிறோம். அதேபோல், அதற்காக வன்முறை சம்பவங்களும் தீர்வாகாது. வன்முறையை நிகழ்த்தியது யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவை. வன்முறையால் பெரிய அளவில் இழப்புகள் மட்டுமே ஏற்படும்.
Links :
Bengaluru: Man behind social media post that trigged violence arrested
3 killed in police firing in bengaluru amid violence over facebook post