இதற்கு உண்மையான படத்தையே பதிவிட்டு இருக்கலாம் !

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான அரசு ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிறது. 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, மாநிலக் கட்சிகளைச் சிதைப்பது மட்டுமின்றி தங்களது கட்சி ஆட்சி செய்யாத மாநில அரசுகளின் உரிமைகளையும் பறித்து வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதற்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்கிற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணியின் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பிரம்மாண்டமான கூட்டம் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் அதில் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்ட தொண்டர்கள் எனப் புகைப்படம் ஒன்றை அக்கூட்டணி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பினர். 

ஆனால், அப்படம் 2017ல் இதே ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் பாஜகவிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியின் போது எடுக்கப்பட்டது. இந்த பேரணி தொடர்பாக  ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் தனது டிவிட்டரில் இதே படத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் 2017ல் பதிவிட்ட அப்படத்திலும் ஒரு போட்டோஷாப் வேலை உள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் அளவைவிட அதிகப்படியாக காட்டப் போலியாக எடிட் செய்யப்பட்ட படம் தான் அது. அதன் உண்மையான படங்கள் ANI, Getty Images போன்ற தளங்களில் உள்ளது. அப்படி எடிட் செய்யப்பட்ட படத்தைத்தான் தற்போதைய இந்தியா கூட்டணி நிகழ்ச்சிக்குக் கலந்து கொண்டவர்கள் எனத் தவறாகப் பதிவிட்டுள்ளனர். 

உண்மையில் தற்போது பாட்னாவில் நடந்த இந்தியக் கூட்டணியின் நிகழ்ச்சியிலும் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அக்கூட்டணியின் ஆதரவாளர்கள் தங்களின் பெருமையைப் பேச அந்த உண்மை படங்களையே பயன்படுத்தி இருக்கலாம்.

அதனைவிட்டு விட்டு பழைய, அதுவும் போலியாக எடிட் செய்யப்பட்ட படத்தைப் பதிவிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader