பிரதமர் மோடியைத் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக தலைவர்கள்..!
கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் காணாமல் போன 5338 பெண்கள், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் கதையையே எதிரொலிக்கின்றன என்று தவறான தரவுகளை வெளியிட்ட வானதி சீனிவாசன்!
ஏப்ரல் 21 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2006 இல் பேசியதாகக் குறிப்பிட்டு பேசிய முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு, இந்தியா முழுவதுமே சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாகவும் உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது “சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது” என்று கூறியிருந்தார்.
எனவே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர், மக்களவை முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பயம் காரணமாக பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இவ்வாறு பேசி வருகிறார் என்றும், இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பிரிவினைவாதம் ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன், தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியைப் போன்றே முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 4 ஆண்டுகளில் #கேரளாவில் காணாமல் போன 5338 பெண்கள், #TheKeralaStory இன் குழப்பமான கதையையே எதிரொலிக்கின்றனர். இருப்பினும், இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, திரு. பினராயி விஜயன் இது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறார். அரசியல் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. காணாமல் போகும் ஒவ்வொரு பெண்ணும் வேதனையில் இருக்கும் குடும்பத்தையும், துயரத்தில் இருக்கும் சமூகத்தையுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். #நம்முடைய பெண்களை பாதுகாப்போம், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம். #KeralaMissingGirls” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை:
கேரளாவில் இருந்து 1000 பெண்கள் கடத்தப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாலியல் அடிமைகளாக அனுப்பப்பட்டு, ISIS பயங்கரவாதிகளுக்கு விற்கப்படுகின்றனர் அல்லது அவர்களுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை அடிப்படையாக கொண்டது தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் கதை என ஆரம்பத்தில் படக்குழுவினரால் கூறப்பட்டது. ஆனால் படத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட பின்னர், படத்தின் தயாரிப்பாளர்கள் படம் ஒரு கற்பனைக் கதை என்றும், காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறித்து கூறிய கருத்திலிருந்தும் தாங்கள் பின் வாங்குவதாகவும் கூறினர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் காணாமல் போன 5338 பெண்கள், தி கேரளா ஸ்டோரி (The Kerala Story) திரைப்படத்தின் கதையையே எதிரொலிக்கின்றன என்று வானதி சீனிவாசன் தற்போது கூறியிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
எனவே இது குறித்து 2019 முதல் 2022 வரை வெளியிடப்பட்டுள்ள NCRB தரவுகளை ஆய்வு செய்து பார்த்தோம். 2023 ஆம் ஆண்டிற்கான தரவு இன்னும் வெளியிடப்படவில்லை. 2019 முதல் 2022 வரை வெளியிடப்பட்டுள்ள NCRB தரவுகளின் படி கேரளாவில் 3803 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இந்த தரவில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், அதே காலகட்டத்தில் கேரளாவில் 3819 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதி வரையில், கண்டுபிடிக்க முடியாத சிறுமிகளின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இதன்படி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள தரவுகள் முற்றிலும் தவறானவை.
மேலும் வானதி சீனிவான் குறிப்பிட்டுள்ள RTI தரவுகளின் அடிப்படையில், 2023 இல் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை கேரளாவில் 1535 ஆக உயர்ந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொண்டாலும், மீட்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இது தொடர்பான தரவுகளை தெளிவாகக் கணக்கிடமுடியாது. மேலும் கேரளாவைப் போன்றே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இதற்கு முன்பே பாஜகவினர் தவறான கருத்துகளை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம் எனப் பரவும் தவறான செய்தி.. உண்மையான எண்ணிக்கை இதோ !
வெறுப்பு பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபடும் பாஜக தலைவர்கள்:
மக்களவைத் தேர்தலையொட்டி, வலதுசாரிகள் அனைவருமே, இந்துத்துவா சித்தாந்தத்தையும், முஸ்லீம் மதத்தினருக்கு எதிரான வெறுப்புணர்வையுமே அடிப்படையாக வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசனை அடுத்து, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டு மதவாத கருத்துகளை பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.
அஸ்ஸாமின் முதலமைச்சரும், பாஜகவின் மற்றொரு குறிப்பிடத்தக்க தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கு சேவை செய்வதை விட பாகிஸ்தானுக்கே சேவை செய்யும் என்று கூறியுள்ளார். இதே போன்று ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா, தேர்தல் பேரணியின் போது ஹைதராபாத்தில் உள்ள மசூதியை நோக்கி அம்புகளை எய்துவது போன்று சைகை செய்தார். இவ்வாறு வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பாஜக தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது. மேலும் இது வாக்காளர்களிடம் எந்தஅளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. மக்களவைத் தேர்தலின் முடிவு தான் இதற்கு பதில் சொல்லும்..!!
ஆதாரங்கள்:
https://ncrb.gov.in/crime-in-india-year-wise.html?year=2022&keyword=