பாஜகவினர் பகிர்ந்த தமிழணங்கு படத்தில் இடம்பெற்ற ” ஸ ” : வைரலாகும் படம்!

மே 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், ” எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! ” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து வைரலான ” தமிழணங்கு ” படம் பதிவிடப்பட்டது. 

Twitter link 

இதற்கு போட்டியாக தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, தமிழ்த் தாய் எனக் குறிப்பிட்டு வேறொரு படத்தை ” எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ” என்ற வாசகத்துடன் பதிவிட்டு இருந்தார்.

Archive link 

இதையடுத்து, பாஜகவினர் பலரும் அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த படத்திற்கும், அண்ணாமலை பதிவிட்ட படத்திற்கும் இடையே லைக்ஸ் போட்டி தொடங்கியதாக கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில், அண்ணாமலை மற்றும் பாஜகவினரால் பகிரப்பட்ட தமிழ்த் தாய் படத்தில் தமிழ் எழுத்துகள் பலவும் சுற்றி இடம்பெற்று இருக்கும். அதில் ” ஸ ” என்ற சமஸ்கிருத எழுத்தும் இடம்பெற்று இருந்துள்ளது.

தமிழ்த் தாய் எனப் பாஜகவினர் பகிரும் படத்தில் சமஸ்கிருத எழுத்து இடம்பெற்றது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பெறவே, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ” தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழக பாஜக மற்றும் அண்ணாமலை சார்பில் போட்டியாக பதிவிடப்பட்ட தமிழ்த் தாய் படத்தில் தமிழ் எழுத்துகள் உடன் சமஸ்கிருத எழுத்து இடம்பெற்றது சர்ச்சையாக மாறி உள்ளது. இதற்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader