தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி பரப்பிய வதந்திகளின் தொகுப்பு

றுநூற்றுமலை கிராமத்தில் 6000 ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகள் கிடைத்ததாக ஒரு செய்தியின் புகைப்படத்தை தமிழக பாஜகவின் சௌதா மணி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். புகைப்படத்தில் இருந்த பிள்ளையார் சிலையை முன்னிலைப்படுத்தி அந்த பிள்ளையார் சிலை 6000 வருடம் பழமையானது போன்றத் தொனியில் பதிவிட்டிருந்தார்.

Twitter Link | Archive Link

ஆனால் அது உண்மை இல்லை எனவும், அந்தக் கோவிலை சுற்றி கிடைத்த கருவிகள் தான் 6000 ஆண்டு பழமையானது என நாம் 2019ம் ஆண்டே கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : வதந்தியில் புரளும் TNnews24 | கீழடியை அறுநூற்றுமலை ஆய்வு மிஞ்சியதா ?

தமிழ்நாடு பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி, “தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து கோவில்களை மட்டுமே இடிக்கின்றனர். மற்ற மதக் கோயில்களை இடிப்பதில்லை” என ஒரு வீடியோவை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேல் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இது தமிழ்நாடு அரசுக்கு எதிரான பதிவு மட்டுமல்ல நீதிமன்றத்துக்கு எதிரானதும் கூட எனக் கூறியிருந்தனர்.

பாஜகவின் சௌதா மணி மதம் சார்ந்து, ஆளும் அரசுக்கு எதிராகவும், எதிர்கட்சிகளுக்கு எதிராகவும், தன்னுடைய கட்சிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் :

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் சேர்க்கப்பட்டதாகவும் இது தமிழ்நாடு அரசின் மத வெறி எனவும் கடந்த செப்டம்பர் மாதம் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் சான்றிதழ் இடம்பெற்று இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த சிலைகள் :

மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது எனத் தினமலர் ஒரு நியூஸ் கார்ட் வெளியிட்டிருந்தது. இதனைப் பகிர்ந்த சௌதா மணி நீதிமன்றத்தில் அடி வாங்குவதே விடியல் அரசுக்கு வாடிக்கையா போச்சு எனப் பதிவிட்டிருந்தார்.

படிக்க : விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த சிலைகளை அமைக்க திமுக அரசு வழக்கு தொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

ஆனால் தினமலர் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில் திமுக என எங்கும் குறிப்பிடவில்லை. தினமலர் வெளியிட்ட செய்தியில் அந்த வழக்கை தொடுத்தது திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் எனக் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

சென்னை மாநகராட்சி வாகனத்தில் சிலுவை வடிவ லோகோ :

சென்னை மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தில் சிலுவை வடிவில் லோகோ இருப்பதாகவும், மாநகராட்சி வாகனத்தில் சிலுவை எப்படி வந்தது எனத் திமுக அரசை கேள்வியெழுப்பி 2021 ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

படிக்க : சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் சிலுவை வடிவ லோகோவா ?| மாநகராட்சியின் பதில் !

ஆனால், அது சிலுவை அல்ல, லைட் ஹவுஸ் போன்ற வடிவில் இருந்த லோகோ தவறாக வரையப்பட்டு உள்ளதாகவும், அதுவும் சமீபத்தில் இல்லை சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது என நாம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அபராதம் விதித்ததால் முஸ்லிம்கள் போலீசை தாக்கினர் :

பரேலி பகுதியில் தவறு செய்த முஸ்லீம்களுக்குக் காவல்துறையினர் அபராத ரசீது கொடுத்ததால் அவர்களை அடித்து உதைப்பதாகப் பொதுமக்கள் சிலர் காவலர்கள் இருவரை தாக்கும் 43 நொடிகள் கொண்ட வீடியோவை 2021 ஜூலை மாதம் தனது ட்விட்டரில் சௌதா மணி பதிவிட்டிருந்தார்.

படிக்க : பரேலியில் அபராதம் விதித்ததால் முஸ்லீம்கள் போலீசை தாக்கியதாக வதந்தி !

ஆனால், ஹரியானாவின் புன்ஹானா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் செல்லும்போது அவர்களது வாகனம் மற்றொரு வாகனம் மீது மோதியது. அதில் ஏற்பட்ட தகராறில் ஹரியானா போலீசை தாக்கியுள்ளனர் என்றும், இதில் மதச் சாயம் ஏதும் இல்லை என்றும் நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பிரிட்டன் பிரதமர் வீட்டில் பூஜை, பகவத் கீதை மீது பதவி பிரமாணம் :

ரிஷி சுனாக் பிரதமருக்கான வீட்டுக்குள் நுழையும் முன், படிக்கட்டுக்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்கி பின் உள்ளே சென்றார். மேலும் பகவத் கீதை மீது கை வைத்து பிரிட்டன் பிரதமராகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து சனாதனம் எனச் சௌதா மணி பதிவிட்டிருந்தார்.

படிக்க : பிரதமர் வீட்டு படிக்கட்டில் பூஜை, பகவத் கீதை மீது பதவி பிரமாணம் என ரிஷி சுனக்கை விடாத பாஜகவினரின் பொய்கள்

ஆனால், 2020ம் ஆண்டுப் பிரிட்டனின் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே விளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து தெரிவித்த வீடியோவை பிரதமர் ஆன பிறகு நடைபெற்றது என வதந்தி பரப்பியதாக நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் :

கடந்த 2021ம் ஆண்டில், ” எனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்குச் செல்லவில்லை ” என்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து நெசமாவா கோபால் எனப் பி.டி.ஆரை கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார்.

படிக்க : பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் !

சௌதா மணி பகிர்ந்த நியூஸ் கார்ட் போலி எனவும், ” வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில் எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் பொய் சொல்வதற்குக் கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா ” எனத் திட்டி பதிவிட்டு இருக்கிறார் எனவும் நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித்கள் பங்கேற்கக்கூடாது : 

கூட்ட நெரிசலில் ஒரு காளையின் மீது மற்றொரு காளை கொம்பால் குத்தியதால் கோபமடைந்த காளையின் உரிமையாளர் பவுன் என்பவர் கம்பால் மற்ற காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் தாக்கிய வீடியோவை பகிர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித்துகள் பங்கேற்கக்கூடாது என அடிக்கப்பட்டதாகச் சௌதா மணி வதந்தி பரப்பியிருந்தார்.

படிக்க : பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் பங்கேற்கக்கூடாது எனத் தாக்கியதாக வதந்தி !

கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவில் குடியேறத் தடை :

கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவில் குடியேறத் தடை எனப் பாஜகவின் சௌதா மணி பரப்பும் செய்தி 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது எனத் தெரிய வருகிறது. அப்படி வெளியான செய்திகளிலும் பல தவறான தகவல்கள் உள்ளதாக நேபாளத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவில் குடியேறத் தடை.. பாஜகவின் சவுதாமணி பரப்பும் தவறான தகவல் !

சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ட கர்ப்பிணி பெண் இறப்பு :

திராவிடர் கழகத்தின் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களில்  ஒருகர்ப்பிணிப் பெண் மயங்கியதால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மரணம் என்ற நியூஸ் கார்டை சௌதா மணி கடந்த அக்டோபர் மாதம் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருந்தார்.

படிக்க : சூரியகிரகணத்தின் போது உணவு உண்ட கர்ப்பிணி பெண் இறந்ததாக வதந்தி !

திராவிடர் கழகம் நடத்திய கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண் மரணம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவிய கார்டு உண்மை அல்ல என்றும், அக்கர்ப்பிணி பெண்கள் நலமாக உள்ளனர் என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

சமையல் எரிவாயு விலை உயர்விற்கு மாநில வரிக் காரணம் :

இந்தியாவில் சமையல் எரிவாயு(கேஸ்) விலை நிர்ணயிப்பதில், அடிப்படை விலை 495ரூ, ஒன்றிய அரசின் வரி 24.75ரூ மற்றும் போக்குவரத்து செலவுடன் 529.75ரூ வருகிறது. அதனுடன் மாநில வரியாக 291.36ரூ, மாநில போக்குவரத்து 15ரூ, டீலர் கமிஷன் 5.50ரூ மற்றும் மானியம் 19.57ரூ எனச் சேர்த்து மொத்தமாக 861.18ரூபாயாகப் பயனாளர்களுக்கு வந்து சேர்கிறது. இதில், ஒன்றிய அரசின் வரின் 5% மட்டுமே, மாநில அரசின் வரி 55% எனக் கூறும் பதிவை 2021 ஜூலை மாதம் சௌதா மணி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

படிக்க : அடுத்த பொய் செய்தி: சமையல் எரிவாயு விலை உயர்விற்கு மாநில வரி காரணமாம் !

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒன்றிய அரசு 5% வரி விதிப்பதாகவும், மாநில அரசு 55% வரி விதிப்பதாகவும் பரப்பப்படும் தகவல் பொய்யானது. மாநில அரசு வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவிற்கு வாட் வரி விதிப்பதில்லை. அதற்கு ஜி.எஸ்.டி வரியே விதிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு 2.5% மற்றும் மாநில 2.5% வரியே விதிக்கப்படுகிறது  எனக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

குடையுடன் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் :

திமுக ஆட்சியில் அரசு பேருந்து மழையின் காரணமாகக் குடையுடன் பேருந்தை இயக்கியுள்ளார் என 2014ம் ஆண்டு வெளி வந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் சௌதா மணி.

படிக்க : குடையுடன் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்.. பழைய படத்தை திமுக ஆட்சியென பரப்பும் பாஜக செயற்குழு உறுப்பினர் !

திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்பட்டார் :

“விடியல் ஆட்சி! சட்டம் ஒழுங்கு காற்றில் பற பறக்குது! போலீஸுக்கே தண்ணி காட்டுது! காட்டுது! அதிகாரம் கண்ணைக் கட்டுது! ஆணவம் தலை தூக்குது! கண்டு கொள்ளத்தான் ஆள் இல்லையே…. காவலர்களுக்கே இந்தக் கதி என்றால் பெண்களின் நிலைமை என்ன மக்களே? ” என 2022 ஜூன் மாதம் சௌதா மணி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

படிக்க : திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக 2019-ல் நிகழ்ந்த வீடியோவை பரப்பும் பாஜகவின் செளதா மணி !

ஆனால், திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாகப் பரப்பப்படும் வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் நிகழ்ந்த சம்பவம் என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : ராகுல் காந்தியின் தாடி, தலைமுடியை மார்ஃபிங் செய்து பரப்பும் பாஜகவினர் !

பிற தொகுப்புகள் : 

இதேபோல், மோடி ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி பரப்பிய வதந்திகளின் தொகுப்பையும் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.

படிக்க :  அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு

மேலும், தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவர் பதவியில் இருக்கும் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகள் தொகுப்பையும் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.

படிக்க : தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு

பாஜகவின் செயற்குழு உறுப்பினர் செளதா மணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மதம், அரசியல் சார்ந்த பொய்கள் மற்றும் வதந்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் மீதான வழக்கின் போது ட்விட்டர் பக்கமே வராதவர் சமீபத்தில் அதிக அளவில் பொய் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

Please complete the required fields.




Back to top button
loader