This article is from Feb 02, 2021

முதலில் விற்பது, அதையே மீண்டும் உருவாக்குவது ! பட்ஜெட் அல்வா?

2021-22ம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு பட்ஜெட் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது.

பொதுத்துறை சொத்துக்களை விற்பதன் மூலம் மத்திய அரசு நிதி திரட்டுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டதில், பட்ஜெட் உரையின் 9-ம் பக்கத்தில் எதை விற்கப் போவதாக கூறியுள்ளார்களோ அதையே 11-ம் பக்கத்தில் மீண்டும் உருவாக்குவது தொடர்பான எதிர்கால திட்டங்கள் குறித்தும் இடம்பெற்று இருக்கிறது.

புதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தேவையான நிதியை பெறுவதற்கு ஏற்கனவே உள்ள பொது உள்கட்டமைப்பு சொத்துகளை பணமாக்குவது (Asset Monetisation) முக்கிய பங்குவகிக்கும். பணமாக்குதலின் செயல்பாடுகளில் உள்ள சில முக்கியமான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

” அ. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் PGCIL ஆகிய இரண்டும் தலா ஒரு உள்கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளையை (Infrastructure Investment Trust – InvIT) கொண்டிருக்கும். அவை சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும். செயல்பாட்டிலுள்ள 5000 கோடி மதிப்புள்ள ஐந்து சாலைகள் NHAI அறக்கட்டளைக்கு மாற்றப்படுகின்றன. இதேபோல், 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார பகிர்வு கட்டுமான சொத்துகள் PGCIL அறக்கட்டளைக்கு மாற்றப்படும்.

ஆ. ஆணையிட்ட பிறகு, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்காக “அர்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை”(Dedicated Freight Corridor) சொத்துக்களை ரயில்வே பணமாக்கும்.

இ. அடுத்ததாக, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்காக பல விமான நிலையங்கள் பணமாக்கப்படும்.

ஈ. சொத்துக்களை பணமாக்குதல் (Asset Monetization) திட்டத்தின் கீழ் வரும் பிற முக்கிய உள்கட்டமைப்பு சொத்துக்கள் :1. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) செயல்பாட்டிலுள்ள டோல் சாலைகள் 2. Power Grid Corporation of India (PGCIL) மின்சார பகிர்வு கட்டுமான சொத்துகள் 3. GAIL, IOCL மற்றும் HPCL உடைய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் 4. டயர் II மற்றும் III நகரங்களில் உள்ள AAI விமான நிலையங்கள் 5. ரயில்வேயின் பிற உள்கட்டமைப்பு சொத்துக்கள் 6. மத்திய அரசின் பொது நிறுவனங்களான மத்திய கிடங்கு கழகம் மற்றும் NAFED போன்றவையின் சேமிப்பு கிடங்கு சொத்துக்கள் 7. விளையாட்டு அரங்குகள்  ” உள்ளிட்டவை குறித்து இடம்பெற்று இருக்கிறது

11-ம் பக்கத்தில் ரயில்வே உள்கட்டமைப்பில், ” இந்திய ரயில்வே அமைப்பு 2030 – தேசிய ரயில் திட்டத்தை தயாரித்து வருவதாகவும், 2030-க்குள் ” Future Ready ” ரயில்வே அமைப்பை உருவாக்க திட்டம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேக் இன் இந்தியா” கனவு நனவாக ரயில்வேயின் லாஜிஸ்டிக் செலவுகளைக் குறைப்பது முக்கியமான பங்கு வகிக்கும். மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை(Dedicated Freight Corridor – DFC) மற்றும் கிழக்கு டிஎஃப்சி ஆகியவை ஜூன் 2022-க்குள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.

அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை (Dedicated Freight Corridor) சொத்துக்களை ரயில்வே பணமாக்கும் என பட்ஜெட் உரையின் 9-ம் பக்கத்தில் கூறிவிட்டு, எதிர்கால திட்டங்களாக 2030-க்குள் தொடங்கப்படும் புதிய டிஎஃப்சி திட்டங்கள் குறித்து தெரிவித்து உள்ளார்கள். மக்கள் நிதியில் உருவாக்கப்படும் பொதுத்துறை சொத்துக்கள் தொடர்ந்து தனியாருக்கு விற்பனை செய்யப்படும் போது லாபம் என்பது யாருக்கானதாக இருக்கும் !

Please complete the required fields.




Back to top button
loader