புரளியில் பிஜேபிக்கு போட்டியாக திமுக ஆதரவாளர்கள் !
சமீபத்தில் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களின் மனைவி குறித்த தவறான செய்திகள் அதிகம் வைரலாக்கப்பட்டது. அந்த செய்திகள் வேண்டும் என்றே வலதுசாரி ஆதரவாளர்களால் தவறாக பரப்பப்பட்டவை. அது பற்றிய பதிவு ஒன்றை youturn-ல் பதிவிட்டு இருந்தோம்.
கார்ட்டூனிஸ்ட் பாலா நெல்லை கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தைப் பற்றி கார்ட்டூன் வரைந்த காரணத்திற்கு கைது செய்யப்பட்டவர். மத்திய அரசின், தமிழக அரசின் தவறுகளை மிகவும் வன்மையாக கண்டித்து வருபவர். அதே வேளையில் தமிழகத்தின் எதிர் கட்சி பற்றியும் பதிவிடுவது உண்டு.
அண்மையில், கார்டூனிஸ்ட் பாலா பெயரில் போலி ட்விட்டர் பக்கங்கள் கொண்டு பெரியார், பிரபாகரன் குறித்து தவறான கருத்துக்களை பதிவிடுவது போன்று சித்தரித்து உள்ளனர். இன்னொரு பதிவில் அவர் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் இடம்பெற்று உள்ளது.
ஒருவரைப் பற்றி தவறாக சித்தரிக்க வேண்டும் என்றால் சமூக வலைத்தளங்களில் அவர்களின் பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கி அவர்கள் கூறுவது போன்று தவறான பதிவுகளை பதிவிட்டு வைரல் ஆக்குவதே கட்சியின் இணைய ஆதரவாளர்கள் வேலை.
கார்டூனிஸ்ட் பாலா பெயரில் போலி கணக்குகள் மூலம் தவறான கருத்துக்களை பதிவிடுவது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளர்களே என தெளிவாக தன் பக்கத்திலேயே குறிப்பிட்டு உள்ளார் பாலா.
ட்விட்டரில் அவர் நேரடியாக பதிவுகள் இடுவதில்லை. அவரின் மீது திமுக ஆதரவாளர்கள் கொண்ட வெறுப்பால் இவ்வாறான பதிவுகள் வெளியாகி வருவதாகவும், போலிகளுக்கு தாம் பயப்படப் போவதில்லை என கூறியுள்ளார் கார்டூனிஸ்ட் பாலா.
முதலில் கார்டூனிஸ்ட் பாலாவின் இப்பதிவில் திருட்டு ரயில் என்ற கருத்தில் இருந்தே அனைத்தும் தொடங்கி உள்ளது. இதையடுத்து போலி கணக்குகள் மூலம் கருத்து மோதல் முற்றியுள்ளது.
கட்சியின் ஆதரவாளர்கள் போலி பெருமையை பேசுவதை விட தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றிய தவறான செய்தியை வைரல் ஆக்குவதில் குறிக்கோளாக உள்ளனர். இதில், சமீபத்தில் கார்த்திகேய சிவசேனாபதியிடம் பிஜேபி ஆதரவாளர்கள் சிக்கிக் கொண்டது பற்றி நாம் எடுத்துரைத்து இருப்போம். அதேபோன்று Youturn நடத்திய கருத்துக்கணிப்பில் பிஜேபி ஆதரவாளர்கள் செய்த வேலையை மற்றொரு கட்டுரையில் கூறி இருந்தோம்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் !
BJP IT WING-ஐ கலாய்த்த கார்த்திகேய சிவசேனாபதி
இறுதியாக, திமுக ஆதரவாளர்கள் கார்டூனிஸ்ட் பாலாவிடம் சிக்கியது பற்றியும் கூறுகிறோம். தேசிய கட்சிகள் மட்டுமின்றி மாநில கட்சியான திமுகவின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக உள்ளனர்.
நக்கீரன் கோபால் விவகாரத்தில் ஆதரவாக இருந்த திமுக தரப்பு கார்டூனிஸ்ட் பாலா விவகாரத்தில் வலதுசாரிகள் செய்த வேலையையே செய்து உள்ளது. ஒருவர் விமர்சனம் வைத்தால் விமர்சனத்தால் எதிர் கொள்ள வேண்டும். அதை விடுத்து போலி செய்திகளையோ அல்லது அவரின் குடும்பத்தைப் பற்றியோ இழிவாகப் பேசுவது இழிவான செயலாகும்.