This article is from Nov 06, 2019

“செல்போன் டவருக்கு” இடம் வேண்டுமென வரும் போலிக் குறுஞ்செய்தி?| எச்சரிக்கை !

செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் சேவைகளுக்காக குடியிருப்பு வீடுகளின் மாடியில், காலி இடங்களில் டவர்களை பொருத்துவது வழக்கம். இப்படி வைக்கப்படும் செல்போன் டவர்களுக்கு காலி இடம் வேண்டும் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் ஸ்க்ரீன்சார்டில் ” 4G டவர் அமைக்க 500 சதுர அடி முதல் காலி நிலம் தேவை முன்பணம் 42,00,000 , வாடகை 35,000 மற்றும் வேலை வழங்கப்படும். தொடர்புக்கு – xxxxxx ” என இடம்பெற்று இருந்தது.

இதை நம்பி அவரின் தந்தையும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது சில ஆவணங்களை கேட்டதாக தெரிவித்து இருந்தார். மேலும், இது தொடர்பாக ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றையும் இணைத்து இருந்தார். ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிவிக்குமாறு நம்மிடம் கேட்டுக் கொண்டார்.

கடந்த வாரம் சிவகங்கை மாவட்டம் படமிஞ்சி கிராமத்தில் வசித்து வரும் அழகர்சாமி என்பவரிடம் போனில் பேசியவர்கள், அவரின் வீட்டு மாடியில் வோடோபோன் நெட்வொர்க் டவர் அமைக்க உள்ளதாகவும், 32 லட்சம் முன்பணம் மற்றும் மாத வாடகையாக 29,500 ரூபாய் அளிப்பதாகவும் கூறியுள்ளார்கள். இதற்காக அவர் 41,500 ரூபாய் முன்பணமாக அளிக்க வேண்டும் எனக் கூறி குறிப்பிட்ட வங்கி கணக்கின் விவரங்களை வோடாபோன் நிறுவனத்தின் பெயரில் போலியான இமெயில் அனுப்பி உள்ளனர். அதை நம்பி அந்த கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார்.

பணம் செலுத்திய பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொழுது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, செல்போன் டவர் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியதாக காவல்நிலையத்தில் அழகர்சாமி புகார் அளித்துள்ளார் என செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இதேபோன்று, ஜூலை 2019-ல் செல்போன் டவர் அமைக்க 45 ஆயிரம் வாடகை, 80 லட்சம் முன்பணம் அளிப்பதாக தேனி இளைஞரிடம் லட்சத்தில் பணத்தை ஏமாற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது.

ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் இருக்கும் எண்ணிற்கு யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். அதில் பேசிய பெண் , ஜியோ டவருக்காக பேசுவதாவும், தங்களின் தரப்பில் இருந்து மற்றொருவர் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிப்பார் எனக் கூறினார். எப்படி அனைத்து எண்களுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகிறீர்கள் எனக் கேட்டதற்கு சரியான பதில் இல்லை, அலுவலகம் எங்கு இருக்கிறது எனக் கேட்டால் கோயம்புத்தூரில் இருப்பதாக கூறினார்கள். அலுவலக விவரங்களை கேட்டதற்கு, அதன் விவரங்களை அனுப்புவதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டனர்.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து எந்தவொரு விவரமும் எஸ்.எம்.எஸ் மூலம் வரவில்லை. செல்போன் டவர் வைப்பவர்கள் தங்களின் நிறுவனத்திற்கு ஏற்ற இடங்களை தேடியே தேர்வு செய்வார்களா அல்லது குறுஞ்செய்தி அனுப்பி வருவார்களா என்ன என்பது கேள்விகளை எழுப்புகிறது. வீட்டின் மாடிகளில் செல்போன் டவர் அமைக்க 30 முதல் 40 லட்சம் வரை முன்பணம் தருவதாக கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலை. இதனை செய்திகளில் பார்க்கலாம். குறிப்பாக, செல்போன் டவர் அமைப்பதாக இடம் வேண்டும் என பேசுபவர்கள் உங்களிடம் பணம் கேட்டால் சுதாரித்துக் கொள்ளவும்.

மக்களின் ஆசையை தூண்டி அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பறிக்கவே இப்படி செல்போன் டவருக்கு இடம் தேவை என ஏமாற்று வேலையை செய்து வருகிறார்கள். இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால் அதைத் நீக்கி விடுங்கள், அழைப்புகள் மூலம் யாரேனும் பேசினால் முழு விவரங்களை கேளுங்கள். இதுபோல் பல வழிகளில் பணம் பறிக்க கும்பல்கள் செயல்பட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்கிறோம்.

UPDATE : 

ஜியோ நெட்வொர்கிற்கு டவர் அமைக்க இடம் வேண்டும் என எஸ்.எம்.எஸ் வழியாக தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாக (அந்த எண்ணுடன்) யூடர்ன் ட்விட்டரில் ஜியோ நிறுவனத்தை டாக் செய்து ட்வீட் செய்து இருந்தோம். அதற்கு Jiocare தரப்பில் இருந்து பதில் அனுப்பி இருந்தனர். அதிகாரப்பூர்வமற்றவை மூலம் வரும் தகவல்களை தயவு செய்து நிராகரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Link : 

money-laundering-claiming-to-set-up-a-cell-phone-tower-near-sivaganga

vikatan.com/news/crime/theni-young-man-loses-rupees-by-cell-tower-fraud

Please complete the required fields.




Back to top button
loader