சென்னையின் தண்ணீர் பஞ்சத்திற்காக பதிவிட்ட லியனார்டோ டிகாப்ரியோ !
ஹாலிவுட் நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தனது குரலினை பதிவு செய்து வருகிறார். திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதினைப் பெற்ற தருணத்தில் கூட மேடையிலேயே உலகின் பருவநிலை மாற்றம் குறித்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சுற்றுசூழல் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் லியனார்டோ டிகாப்ரியோ தற்பொழுது சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவிட்டு இருக்கிறார்.
” தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இருந்து சென்னையை காப்பாற்ற மழையால் மட்டுமே முடியும். அனைத்து கிணறுகளும் முழுவதும் காலியாகி விட்டது மற்றும் நகரம் தண்ணீரின்றி உள்ளது. தென்னிந்திய நகரமான சென்னை தற்பொழுது மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு நிற்கிறது. அந்நகரத்திற்கு நீர் தரும் நான்கு முக்கிய நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக உடனடித் தீர்வுகளை நோக்கி அந்நகரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசின் தண்ணீர் லாரிகளுக்கு பின்னால் அம்மக்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். தண்ணீர் இல்லாத காரணத்தினால் உணவகங்கள், விடுதிகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயிலின் ஏ.சி வசதி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு தண்ணீர் வளங்களைக் கண்டறிய அரசு அதிகாரிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஆனால், அம்மக்களோ தொடர்ந்து மழைக்காக பிராத்தனை செய்கின்றனர் ” என சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் முரளிதரன் எழுதிய பிபிசி கட்டுரையின் அடிப்படையில் பதிவிட்டு இருந்தார்.
Link : https://www.bbc.com/news/world-asia-india-48672330
சென்னையின் தண்ணீர் நெருக்கடி குறித்து லியனார்டோ டிகாப்ரியோ பதிவிட்ட பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னை நகரத்திற்கு நீர் தரும் முக்கிய ஏரிகள் வறண்டு விட்டன. தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர அரசு முயற்சித்து வருகிறது. மக்கள் மழையை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளனர்.