தமிழ்நாட்டிற்கு ரூ3.95 கோடி நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு.. தலைப்பால் குழப்பத்தை ஏற்படுத்தும் தந்தி டிவி !

மிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பெய்த தொடர் கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மழைநீரில் மூழ்கி பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளன. ஒவ்வொரு பகுதியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தாலும், வேளச்சேரி, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலை தொடர்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக ரூ5000 கோடி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

X post link 

இந்நிலையில், “தமிழகத்துக்கு ரூ.3.95 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்  ” என்ற தலைப்பில் தந்தி டிவி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த செய்திக்கு, சென்னை மழை தொடர்பான ஹாஷ்டாக்கையும் பயன்படுத்தி உள்ளனர்.

இதனால், தமிழ்நாட்டின் வெள்ள நிவாரண பணிக்கு ஒன்றிய அரசு ரூ3.95 கோடி மட்டுமே கொடுத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் இச்செய்தியை பகிர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஆனால் செய்தியின் உள்ளே, தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த 3 கோடியே 95 லட்ச ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழகத்தில் 54 ஆயிரத்து 432 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 800 அங்கன்வாடி மையங்களை தரம் உயரத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 2022-23-ஆம் நிதியாண்டில் அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த தமிழகத்திற்கு 3 கோடியே 95 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் ” என்றுள்ளது.

வெள்ள பாதிப்பிற்கு ஒன்றிய அரசு நிதி : 

X post link 

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ” கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொள்கிறது. பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம்.

தேசிய பேரிடர் தணிப்பு நிதியின்(NDMF) கீழ் சென்னை பேசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதில், ரூ.500 கோடி ஒன்றிய அரசின் உதவியும் அடங்கும் ” எனப் பதிவிட்டு உள்ளார்.

மேலும் படிக்க : நீட் ரிட் மனு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட தந்தி டிவி.. அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பாஜகவினர் !

அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்த தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ரூ3.95 கோடி நிதி ஒதுக்கிய செய்திக்கு சென்னை மழை தொடர்பான ஹாஷ்டாக்களை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் தலைப்பால் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது தந்தி டிவியின் செய்தி.

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader