புழல் ஏரி கரை உடையும் அபாயம் எனப் பரவிய செய்தி.. ஏரி பாதுகாப்பாக உள்ளது – தமிழ்நாடு அரசு !
சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்கான பயன்பாட்டில் உள்ள மிக முக்கியமான ஏரி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரி. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த மிக அதிக கன மழையால் புழல் ஏரி நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புழல் ஏரி நிரம்பி வழிவதால் அதன் கரை உடையும் அபாயம் இருப்பதாகவும், புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து சேதமடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Look at this pic.twitter.com/HtIO8HgfGe
— Rajesh Kumar A (@a_rajesh_kumar) December 7, 2023
மேலும், புழல் ஏரியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழியும் காட்சி என வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இத்தகவலையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் தரப்பில் அளித்த பதிலில், ” புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும்.
இன்றைய (07.12.2023) காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது.
இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புழல் ஏரியை ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. இந்த மண்சரிவால் ஏரிக்கு தொடர்பில்லை. புழல் ஏரியால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் வராது வராது வராது. இருப்பினும், புழல் ஏரியின் நீர்மட்டத்தை 1 முதல் 1.5 அடி வரை குறைவாக வைக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.