This article is from May 18, 2019

வறண்டது சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் !| நீர் இருப்பு எவ்வளவு ?

ஆண்டாண்டு வரும் கோடைக்காலத்துடன் தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டு வந்து விடும். தமிழகமெங்கும் அன்றாட பயன்பாட்டிற்காக காலி குடங்களுடன் மக்கள் காத்திருக்கும் செய்திகள் தண்ணீர் அவசியத்தை எடுத்துரைத்தது. மாநிலம் முழுவதும் தண்ணீர் இப்படி இருக்க, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள  ஏரிகளின் தண்ணீர் நிலை பற்றிய புள்ளி விவரம் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

13.05.2019 தேதி நிலவரப்படி, சென்னையின் நீர்நிலைகளில் உள்ள நீரின் இருப்பு பற்றிய விவரத்தை அட்டவணையிட்டு உள்ளனர். 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 143 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்துள்ளது. சோழவரம் ஏரியில் வெறும் 4 மில்லியன் கன அடி நீரும், ரெட்ஹில்ஸ் ஏரியில் 45 மில்லியன் கன அடி நீரும், 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிக கொள்ளளவு நீரைக் கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் 1 மில்லியன் கன அடி நீர் மட்டுமே மீதம் உள்ளது.

இதில், இருந்து வீராணம் ஏரி மட்டுமே தப்பித்து உள்ளது. 1465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 984 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேற்கண்ட தகவலை போல் சென்னையின் நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருக்கலாம். மே 18-ம் தேதி நிலவரப்படி, பூண்டியில் 118 மில்லியன் கன அடி நீரும், சோழவரத்தில் அதே 4 மில்லியன் கன அடி நீரும், ரெட்ஹில்ஸ் ஏரியில் 28 மில்லியன் கன அடி நீரும் , செம்பரம்பாக்கம் ஏரியில் 1 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளன.

தண்ணீர் தேவைக்கு ஏரிகளின் நீர் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் ஏரிகளின் நீர் இருப்பு வறட்சியை நோக்கி சென்றுள்ளது. மே 18-ம் தேதியில் இந்த நான்கு ஏரிகளில் உள்ள மொத்த நீர் இருப்பானது 151 மில்லியன் கன அடி நீராகும். சென்ற ஆண்டில் இதே நாளில் நான்கு ஏரிகளில் இருந்த மொத்த கொள்ளளவு 3,175 மில்லியன் கன அடி நீராகும்.

சென்னை நம்பி இருக்கும் பிரதான ஏரிகளின் நிலை இதுவே. எனினும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளின் குடிநீர் தேவைக்கு வீராணம் எரி துணையாய் நிற்கிறது. வீராணம் ஏரியின் நீர் இருப்பு மட்டுமே சென்னையின் தண்ணீர் தேவையை காத்துக் வருகிறது.

கோடைக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்கள் இருக்கும் வேளையில் ஏரிகளின் வறட்சி தலைநகரின் தண்ணீர் தேவைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. தனிநபராக முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். இனி வரும் காலங்களிலும் எங்கும் தண்ணீர் பிரச்சனை மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Proof : 

https://chennaimetrowater.tn.gov.in/index.html

Please complete the required fields.




Back to top button
loader