கோழிக்கு கொரோனா என வதந்தி பரப்பியவர் கைது| வதந்தி பாய்ஸ் உஷார் !

இந்தியாவில் கொரோனா வைரசால்(COVID-19) பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே பெங்களூரில் கோழியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக வதந்திகள் பரவி மக்களிடையே அதிர்ச்சியையும், விலை சரிவையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழகத்திலும் கோழிக் கறியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் உலாவுகின்றன என யூடர்ன் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

மேலும் படிக்க : பெங்களூரில் பிராய்லர் கோழிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

எனினும், கோழிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக பரப்பப்படும் வதந்திகள் முடிவில்லாமல் பரவி தமிழகத்திலும் கோழி விலை சரிவை கண்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வதந்தியால் கோழி இறைச்சியின் விற்பனை பாதிக்கும் மேல் குறைந்தது. இதனால் விற்பனையாளர்கள் ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால் 10 முட்டை இலவசம் என அறிவிப்புகளை வெளியிட்டும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் அளித்த புகாரில், ” பெரியசாமி என்பவரின் பெயரில் பரவிய செய்தியில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பிராய்லர் கோழி கடைகளில் உள்ள அனைத்து கோழிகளையும் தாக்கி உள்ளது. தயவு செய்து யாரும் கோழி இறைச்சியை சாப்பிட வேண்டாம். இது மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளதாக ” கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் எண் கரூர் மாவட்டம் ஊனாங்கல்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவருடையது எனத் தெரிய வந்தது. ஆயில்கடை ஒன்றில் வேலைபார்த்து வரும் பெரிய சாமியை தவறான தகவலை பரப்புவது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க : மதுரையில் கொரோனாவா ?| எண்ணெய் பலகாரம், கோழியால் கொரோனா பரவுகிறதா?

கடந்த மாதம் இதேபோல் நெய்வேலியில் உள்ள கறிக்கடையில் கொரோனா வைரஸ் தாக்கிய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வதந்தியை பரப்பிய சிறுவனை போலீசார் கைது செய்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

கொரோனா வைரஸ் பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சமடையும் அளவிற்கு சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. தவறான தகவல்களை பரப்பாமல் உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏனெனில், உண்மையான தகவல் என நீங்கள் தெரியாமல் பகிரும் தகவல் கூட உங்களுக்கே எதிராக திரும்பக்கூடும். வதந்தி பரப்புபவர்கள் மீது போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Please complete the required fields.




Back to top button