This article is from Nov 04, 2018

மத வெறியால் பலியான உயிர்கள்

வேற்றுமையில் ஒற்றுமை என பல்வேறு மதங்களுடன் இந்திய தேசம் விளங்கினாலும் ஏதோவொரு மூலையில் மதச் சண்டைகளும், உயிர் பலிகளும் ஏற்படுவதை கேட்டு அறிகிறோம். சிலரின் மத உணர்வு வெறியாக மாறி அப்பாவி மக்களும் அதற்கு இரையாகின்றனர். அவ்வாறான இரு சம்பவங்கள் பற்றி காண்போம்.

தெலுங்கானா பூசாரி மரணம் :

தெலுங்கானா மாநிலத்தின் பூச்சம்மா மைதான் ரயில் சந்திப்பிற்கு அருகே அமைந்துள்ளது சாய் பாபா கோவில். அக்டோபர் 26-ம் தேதி வழக்கம் போல் கோவில் பூசாரியான 68-வயதான சத்யநாராயணா பூஜையைத் தொடங்கினார்.

கோவிலில் பூஜையைத் தொடங்கிய போது ஒலிப்பெருக்கி கொண்டு பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அப்பகுதியின் இமாம் ஷேத் நதிக் ஒலிப்பெருக்கியை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அவரின் பேச்சை ஏற்க மறுத்துள்ளார் கோவில் பூசாரி. இதனால் ஆத்திரம் அடைந்த இமாம் சத்யநாராயணை தாக்கி உள்ளார்.

அப்பகுதி மக்கள் வந்து தடுத்தப் பிறகே தாக்குவதை நிறுத்தியுள்ளார். கோவில் பூசாரி தாக்கப்பட்டது முழுவதும் கோவிலில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யநாராயண் சுயநினைவை இழந்த நிலைக்கு சென்றார்.

இதைத் தொடர்ந்து ஷேத் நதிக் மீது கொலை முயற்சி IPC 307 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர் மத்வாடா காவல்துறை. சிகிச்சைப் பெற்று வந்த கோவில் பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவிலில் ஒலிப்பெருக்கி ஒலிக்கச் செய்த காரணத்தினால் 68 வயது முதியவர் என்றுக் கூட பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளார் இமாம் ஷேத் நதிக். இந்த சம்பவம் அதிகம் வைரலாகி வருகிறது.

பீகாரில் முஸ்லீம் முதியவர் எரித்துக் கொலை :

அக்டோபர் மாதம் பீகார் மாநிலத்தில் வடக்கே உள்ள சிடமர்கி பகுதியில் துர்கா பூஜையின் போது நடைபெற்ற ஊர்வலம் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் வழியாக செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவ்வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்க மறுக்கவே மோதல் உருவாகியது.

உள்ளூர் ரவுடி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை நிகழ்ந்ததாகக் போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் ஜைனுல் அன்சாரி என்ற 80 வயது முதியவர் அக்கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

அன்சாரி தன் மகளின் வீட்டிற்கு சென்று விட்டு வந்த போது அவரை கொடூரமாக தாக்கிய கும்பல் அவரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்த பிறகு அன்சாரி காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது இணையத்தில் பரவிய வீடியோக்கள் மூலம் அன்சாரி எரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

வன்முறை மோதலில் ஈடுபட்ட எந்த கும்பலிலும் அன்சாரி இல்லை. எனினும், அப்பகுதியில் இருந்த காரணத்தினால் இவ்வாறான கொடுமையை நிகழ்த்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 38 பேரை கைது செய்து உள்ளனர், 6 எப்.ஐ.ஆர் பதிவு போடப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவமும் மதம் உணர்வு வெறியாக மாறியதால் நிகழ்ந்தவையே. மத நல்லிணக்கம் பேணி ஒற்றுமையோடு இருப்பதே ஆகச் சிறந்த ஒன்றாகும். மத நம்பிக்கை வெறியாக மாற அரசியலும் ஓர் காரணம் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

Sai Baba Temple Priest lost life after attack in Warangal | ABN Telugu

38 arrested for lynching in Bihar’s Sitamarhi district

 

Please complete the required fields.




Back to top button
loader