ஒரே அறையில் கொரோனா நோயாளிகளும், சடலங்களும்.. மும்பை மருத்துவமனையின் டீன் பதில்.
சமீபத்தில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வளைதளங்களில் ஓர் வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில், 20 படுக்கைகளுக்கு மேல் உள்ள அறையில் கருப்பு பாலிதீன் பைகளால் மூடப்பட்ட சடலங்களுக்கு அருகே நோயாளிகளும் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாமல் மற்ற நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டு இருப்பது மற்றும் எந்தவித பாதுகாப்பு உடையும் அணியாமல் பலரும் அங்கு இருப்பதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
வார்டில் நோயாளிகள் உடன் குறைந்தது 6 சடலங்கள் படுக்கையில் கருப்பு பாலிதீன் பைகளால் மூடி கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது. சில நோயாளிகளின் குடும்பத்தினர்களும் வீடியோவில் இடம்பெறுவதை பார்க்க முடிந்தது. மும்பை அருகே உள்ள சியோன் பகுதியில் இருக்கும் லோக்மான்யா திலக் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இக்காட்சி பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிராவின் பிஜேபி எம்எல்ஏ நிதிஷ் ரானே தன் ட்விட்டர் பக்கத்தில், சியோன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அருகே சடலங்கள் இருக்கும் வீடியோவை பதிவிட்டு சியோன் மருத்துவமனை மற்றும் மும்பை மாநகராட்சி செயல்படும் முறை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW— nitesh rane (@NiteshNRane) May 6, 2020
இச்சம்பவம் தொடர்பாக சியோன் மருத்துவமனையின் டீன் பிரமோத் இங்லே பி.டி.ஐ செய்தி முகமைக்கு அளித்த தகவலில், ” கோவிட்-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுக்கின்றனர். இதன் காரணமாக மருத்துவமனையிலேயே சடலங்கள் உள்ளன. இப்போது அந்த சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன மற்றும் பிரச்சனை குறித்து விசாரித்து வருகிறோம். மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மொத்தம் 15 பிரிவுகள் மட்டுமே உள்ளன. அதில், ஏற்கனவே 11 பிரிவில் சடலங்கள் உள்ளன. அனைத்து சடலங்களையும் பிணவறைக்கு மாற்றினால் கோவிட்-19 தவிர பிற காரணங்களால் இறந்தவர்களின் உடல்களுக்கும் பிரச்சனை ஏற்படும் ” எனக் கூறி இருந்தார்.
எந்தவொரு உடல்களையும் அரை மணி நேரத்திற்கு மேல் வார்டில் வைக்கக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. ” நாங்கள் சடலங்களை சவக்கிடங்கிற்கு மாற்றத் தொடங்கினோம் ” என்று இங்லே கூறியுள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுப்பதாக மருத்துவமனை மற்றும் மும்பை மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக அரசே அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
Links :
Shocking Video: Bodies Next To Coronavirus Patients In Mumbai Hospital
Mumbai: Viral video shows bodies of coronavirus victims lying next to patients at Sion hospital