மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட பலரின் மீது புகார் அளிக்கப்பட்டு நான்கு பேரை கைது செய்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தருமபுரம் ஆதீன சைவ மடத்தின் 27வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக சிலர் மிரட்டல் விடுத்து வருவதாக கூறி மடாதிபதியின் சகோதரரும், திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் இருந்து வரும் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
அவர் அளித்த புகாரையடுத்து பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், ஆடுதுறையைச் சேர்ந்த வினோத்(பாஜக) , தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், திருவெண்காடு விக்னேஷ் (பாஜக), கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, செய்யூர் ஜெயசந்திரன், திருக்கடையூர் விஜயகுமார்(திமுக), மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
புகாரையடுத்து துரித நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட ஆதீனத்தின் அறிக்கையில், ” கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.. தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் ” எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மட்டுமின்றி திமுக நிர்வாகியான திருக்கடையூர் விஜயகுமார் (ஒன்றியச் செயலாளர்) பெயர் இடம்பெற்றும் இருந்துள்ளது. இது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அதை மறுத்து விருத்தகிரி காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அக்கடிதத்தில், ” நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்தமைக்கு காவல் துறைக்கு மிகவும் நன்றி. இதில் திருக்கடையூர் திரு. விஜயகுமார் என்பவர் எனக்கு இந்த பிரச்சினை விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர் ஆவார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபர்களிடம் விஜயகுமார் பேசி, பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தார். அது பலன் அளிக்கவில்லை. அதனால் விஜயகுமார், அந்த நபர்கள் ரவுடிகளாக இருப்பதால் காவல்துறையை நாடுவது மிகவும் நல்லது என அவர் கூறிய அறிவுரையினாலும், ஆலோசனையின் பெயரிலே நான் காவல்துறையை அனுகி உதவியை நாடினேன். எங்களுக்கு உதவி செய்தது தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை ” எனக் கூறி இருக்கிறார்.