டெல்லிக்கு மாசடைந்த காற்று பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்ற உ.பி அரசு வழக்கறிஞர் !
இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்று தரத்தில் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. மாசடைந்த காற்றால் டெல்லியில் வசிக்கும் மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. உலகின் காற்று மாசடைந்த நகரங்களில் டெல்லி இடம்பிடித்து இருக்கிறது.
இந்நிலையில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. காற்று மாசை குறைக்க 24 மணி நேரத்திற்குள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காற்று தர மேலாண்மை அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பான, டெல்லி அரசு மற்றும் காற்று தர மேலாண்மை அமைப்பும் எடுத்த நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில், மாசடைந்த காற்று பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்து வருவதாக உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர் கூறியது பேசுப் பொருளாக மாறி உள்ளது.
உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ” உ.பியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேசிய தலைநகரின் மாசுபாட்டில் எந்தப் பங்கும் இல்லை. மாசுபட்ட காற்று டெல்லியை நோக்கி செல்லவில்லை. பாகிஸ்தான் திசையில் இருந்து வரும் மாசுபட்ட காற்றே டெல்லியில் காற்றின் தரத்தைப் பாதிக்கிறது.
தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் (CAQM) உள்ள காற்றின் தர மேலாண்மை ஆணையம் தொழிற்சாலைகளை 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கும் முடிவால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கரும்பு மற்றும் பால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, ” அப்படியானால் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும் என்கிறீர்களா ? ” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
2019-ம் ஆண்டு உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா, டெல்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா காரணமாக இருக்கலாம். இரு அண்டை நாடுகளில் ஒன்றுதான் இந்தியாவிற்கு விஷ வாயுக்களை பரப்பியிருக்கலாம் ” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.
links :
Pakistan may have released poisonous gas to pollute air in India, says UP BJP leader