டெல்லியில் பாஜக யாத்திரை விளம்பரங்களில் தமிழ் எழுத்தாளரின் புகைப்படம் !

டெல்லியில் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. குறிப்பாக, பாஜக குடிசை பகுதியில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் டெல்லியில் உள்ள குடிசை பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இதற்காக, டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ” ஜகி சம்மான் ” என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குடிசை வாழ் மக்களைச் சந்தித்து ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்படும் யாத்திரைக்காக கட்சி சார்பில் போஸ்டர், பேனர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் என அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த யாத்திரைக்காக பாஜக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள பொது மக்களின் புகைப்படங்களில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படமும் இடம்பெற்றுள்ளது.
Look carefully at these posters in Delhi, a picture of the acclaimed author, teacher, and literary scholar @perumal_murugan has been used in the poster. Clearly, the picture has been picked up randomly from the internet. pic.twitter.com/FvBhmTxliY
— Namita Waikar नमिता वाईकर نمیتا وائکر (@NamitaWaikar) November 29, 2021
பத்திரிகையாளர் நமீதா வய்க்கர் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெல்லியில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை கவனமாக பாருங்கள். இந்த போஸ்டரில் பேராசிரியர், எழுத்தாளர் பெருமாள் முருகன் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தி உள்ளார்கள் எனத் தெளிவாய் தெரிகிறது ” எனப் புகைப்படங்கள் உடன் பதிவிட்டு இருக்கிறார்.
தன்னுடைய புகைப்படம் பாஜகவின் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளதை அறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ” குடிசைவாசிகளில் ஒருவனாக இருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி ” என விளம்பர புகைப்படங்கள் உடன் பதிவிட்டு இருக்கிறார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ” மாதொருபாகன் ” எனும் நாவலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் சர்ச்சை ஆகியது. இவருடைய படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. பாஜக விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட பெருமாள் முருகனின் புகைப்படம் 2018-ல் நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
Links :
An Indian Couple Consider a Daring Gambit to Have a Baby