டெல்லி விவசாயிகள் போராட்டமெனப் பரப்பப்படும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !
மத்திய அரசின் பேச்சு வார்த்தையில் உடன்பாடில்லாமல் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிலர் பகிர்ந்து வருவதை நாம் பல கட்டுரைகளின் வாயிலாக தொடர்ந்து வெளியிட்டு இருக்கிறோம்.
இதேபோல், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல பழைய புகைப்படங்களும் உலாவி வருகின்றன. அத்தகைய புகைப்படங்களின் தொகுப்பை இக்கட்டுரையில் காண்போம்.
புகைப்படம் 1 :
டெல்லியில் நுழைந்த விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை இந்திய அளவில் வைரல் செய்து வருகிறார்கள்.
#KisanLongMarch at the outskirts of Mumbai yesterday night. Today they march into Mumbai. pic.twitter.com/VNp4yFWqGp
— CPI (M) (@cpimspeak) March 11, 2018
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 மார்ச் 11-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இது கடந்த 2018-ம் ஆண்டில் மும்பையில் விவசாயிகள் நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது. டெல்லியில் அல்ல.
புகைப்படம் 2 :
போலீஸ் பேரிகார்டுகளை தாண்டி வரும் விவசாயிகள் மீது தண்ணீரைப் பாய்ச்சும் புகைப்படம் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒன்று.
2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தி அவுட்லுக் இந்தியா செய்தியில், ” டெல்லி-உத்தரப் பிரதேசம் மாநில எல்லையில் விவசாய கடன்களை தள்ளுபடி மற்றும் மின்கட்டணம் தொடர்பான போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதாக இப்புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
புகைப்படம் 3, 4 & 5 :
2020 செப்டம்பர் மாதம் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் சாலையில் பேரணி, போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருந்தாலும் கூட டெல்லியில் எடுக்கப்பட்டது இல்லை.
புகைப்படம் 6 :
விவசாயிகள் போராட்டத்திற்கு ராஜஸ்தானில் இருந்து தில்லி வரும் பெண் விவசாயிகள், டிராக்டர் ஒரு பெண் ஓட்டி வருகிறார் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஹரியானாவின் ரோக்டாக் பகுதியில் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டு கேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஜாட் இன பெண்கள் டிராக்டர்களில் சென்று போராட்டம் நடத்தியதாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 06-ம் தேதி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை பார்க்க முடிகிறது. தவறான மற்றும் பழையப் புகைப்படங்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆதாரம் :
India’s controversial farm bills become law despite protests
Farmers take to the streets over farm Bills
Explained: Are New Farm Bills Anti-Farmer? All You Need To Know
Jat stir gaining momentum, crowds swelling