திமுக ஜெகத்ரட்சகன் இலங்கையில் ரூ.26,600 கோடி முதலீடா ?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், வருகிற நாடாளுமன்ற தேர்தலின் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளருமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் இலங்கையில் தொடங்க உள்ள திட்டத்திற்கு ரூ.26,000 கோடியை முதலீடு செய்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் 26,000 கோடி அந்நிய முதலீட்டில் ஒரு திட்டம் தொடங்க இருக்கிறது. அதில் முழுத்தொகையும் ஜெகத்ரட்சகனின் முதலீடு இல்லையெனினும் அதில் அவரது நிறுவனம் பங்குதாரராக இருந்து அதிகளவில் பணத்தை முதலீடு செய்ய உள்ளனர்.
இலங்கையில் 3.85 பில்லியன் மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தில் நேரடி அந்நிய முதலீடாக அதிகளவில் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. இலங்கை வரலாற்றில் இதுவே நேரடிய அந்நிய முதலீட்டில் வந்த அதிகபட்ச தொகை இதுவேயாகும்.
இதற்கு பதில் அளித்த இலங்கையின் Board of Investment கூறுகையில், ” ஓமன் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம், பங்குதாரர்கள் மற்றும் சில்வர் பார்க் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. எனினும், பங்குதாரர்களுக்கு இடையேயான பதிவில் ஓமன் எண்ணெய் நிறுவனம் ஆனது திட்டத்தில் 30% பங்களிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் BOI கூற்றில், சில்வர் பார்க் நிறுவனத்தின் பங்கும் இருக்க வாய்ப்புள்ளது என்பதையே தெளிவுப்படுத்துகிறது.
சில்வர் பார்க் நிறுவனம் :
Silver park international ltd எனும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தின் நான்கு பேரைக் கொண்ட இயக்குனர்கள் குழுவில் மூன்று பேர் திமுகவின் ஜெகத்ரட்சகன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் Singapore national regulator ஆன Accounting and Corporate Regulatory Authority-ல் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், ஜெகத்ரட்சகன் மனைவி அனுசியா, மகன் சந்தீப் ஆனந்த், மகள் ஸ்ரீ நிஷா ஆகியோர் இயக்குனர்களாக இருக்கின்றனர். 2017-ல் இணைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இணையதளம் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The Hindu பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, அந்நிய நேரடி முதலீடான 1,887 மில்லியன் டாலரில் 70 சதவீதத்தை சில்வர் பார்க் நிறுவனம் அளிப்பதாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக வெளியாகி இருக்கிறது.
இலங்கை எண்ணெய் ஆலை திட்ட ஒப்பந்ததில் கையெழுத்திட ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் இலங்கைக்கு சென்று உள்ளதாக இலங்கை அரசிடம் அதிகாரப்பூர்வமான செல்போன் உரையாடல் மூலமாக பெறப்பட்ட தகவலை Economics Times வெளியிட்டு உள்ளது.
தற்போது வரை சில்வர் பார்க் மற்றும் இலங்கை அரசின் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தெரிகிறது.
2014 தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தில், 2012-13-ல் தன் வருமானம் 15.58 லட்சம் என்றும், தன் மனைவியின் மொத்த வருமானம் ரூ.2.04 கோடி என குறிப்பிட்டு உள்ளார் ஜெகத்ரட்சகன்.
ஆனால், 2017-க்கு பிறகு அவர் குடும்பத்தினர் இயக்குனர்களாக இணைந்த சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சில்வர் பார்க் நிறுவனம் சார்பில் இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தில் கையெழுத்திட சென்றுள்ளனர். இந்திய தொழிலதிபர் மற்றும் தமிழக அரசியல் தலைவராக இருப்பவரின் குடும்பத்தினர் பெயர் ஆயிரக்கணக்கான கோடி அந்நிய முதலீட்டில்(FDI) அடிபடுவது தமிழக வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றது.
இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க உள்ள பகுதியில் இருக்கும் Hambantota துறைமுகம் 2017-ல் சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் :
DMK’s Jagathrakshakan Swamikannu travelled to Sri Lanka for record FDI oil refinery deal signing
DMK leader Jagathrakshakan’s family linked to record FDI in Sri Lanka
Jagathrakshakan 2014 affidavit