செந்தில் பாலாஜியின் மணல் விவகார பேச்சு.. விளக்கமும், மக்களின் கோரிக்கையும் !
கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி திமுக ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், ” மு.க. ஸ்டாலின் மே மாதம் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்ற உடன் 11.05 மணிக்கு நீங்களே மாட்டுவண்டியை மணல் அள்ளுவதற்கு ஆற்றுக்கு ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள். தடுத்தால் எனக்கு போன் பண்ணுங்கள் அந்த அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் ” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மணல் கொள்ளை அடிக்கலாம் என்று, மக்களுக்கு முன்கூட்டியே தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. : pic.twitter.com/PG8kvpiCha
— Radikaa Sarathkumar (@realradikaa) March 17, 2021
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மணல் கொள்ளையை வெளிப்படையாக கூறுவதாகவும், மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என மிரட்டலாக பேசுவதாக செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.— Kamal Haasan (@ikamalhaasan) March 17, 2021
கரூர் மாவட்டத்தில் 15,000 மாட்டுவண்டி விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, ஆளுங்கட்சி அமைச்சரின் எதேச்சதிகார அடக்குமுறையை எதிர்த்து, என் மாவட்ட மக்களின் குரலாக, என் குரல் எதிரொலித்ததை கண்டு பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதட்டமும் வருகிறது? https://t.co/CRpdVh4Vx8 pic.twitter.com/RgYcmFj3Ib
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) March 17, 2021
இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் கரூர் வேட்பாளர் எம்.ஆர்.பாஸ்கர், ” மாட்டுவண்டியில் மணல் அள்ளும் பிரச்சனையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இருவேறு விதமாக பேசுவதாகவும், மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆணை பெற்று மாட்டுவண்டியில் மணல் அள்ள பொதுப் பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் சுற்றுவட்டாரப் பிரச்சாரத்தின் போது பேசியதாக ” பாலிமர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
தினேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவிற்கு 2020 டிசம்பரில் நீதிமன்ற அளித்த தீர்ப்பில், ” கரூரில் மணல் குவாரி அமைப்பதற்கு ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட வேண்டும், மற்ற இரண்டு இடங்கள் லாரிகளுக்கு அடையாளம் காணப்பட வேண்டும். எனவே, உரிய உத்தரவிற்காக உயர் அதிகாரிகளுக்கு ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது ” எனக் கூறப்பட்டுள்ளது. இதையே, செந்தில் பாலாஜியும் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, கரூர் மாவட்டத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரி பல கோரிக்கை மனுக்கள் ஆட்சியாளர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியும் மாட்டுவண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உடன் கோரிக்கை மனுக்களை வழங்கி இருக்கிறார். இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்சனை.
திமுக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியது கரூர் மாவட்டத்தில் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையே. எனினும், தங்கள் ஆட்சி தொடங்கிய உடனே மாட்டுவண்டியை ஆற்றுக்கு விடலாம், தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள், எனக்கு போன் செய்யுங்கள் என பேசியதெல்லாம் மிரட்டல் பேச்சாகவும், சரியான அணுகுமுறையும் அல்ல. விளக்கம் அளிக்கும் வீடியோவில் இருக்கும் தெளிவு பிரச்சார பேச்சில் இல்லை என்பதே சர்ச்சைக்கு காரணம்.
Links :
தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரச்சாரம்
மணல் அள்ள அனுமதி கோரி தொழிலாளர்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு