தமிழ்நாடு Vs உத்தரபிரதேசம்: இன்றும் உ.பி.யில் பல பள்ளிகளில் மின்இணைப்பு வசதிகள் செயல்பாட்டில் இல்லை..!!

சமீபகாலமாகவே, உத்தரப்பிரதேசம் அடிக்கடி தமிழ்நாட்டுடன் ஒப்பிடப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூலில் தமிழ்நாட்டை விட உத்தரபிரதேசம் அதிகமாக உள்ளது, எனவே தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி தேவை என்று கூறி கடந்த மாதத்தில் பாஜக மற்றும் வலதுசாரிகளால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது. மாறாக உ.பி.யை விட தமிழ்நாடே ஜிஎஸ்டி வசூலில் சிறந்து செயல்படுகிறது. இதே போன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (ஜிடிபி) ஒட்டுமொத்த அளவில் உ.பி., தமிழ்நாட்டை முந்தியதாகக் கூறி ஒரு தவறான தகவல் பரவியது.

மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் உத்தரபிரதேசத்தை ஒப்பிடும் போது, மிகப்பெரிய வேறுபாட்டை காணமுடிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் மக்கள்தொகையுடன் (8 கோடி) ஒப்பிடும்போது உ.பி.யில் சுமார் 25 கோடி மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உ.பி. தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு மக்கள்தொகையுடன் காணப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. இதே போன்று புவியியல் ரீதியாகவும் உ.பி. தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு பெரியதாகவே உள்ளது.

கல்வியில் பின்தங்கியுள்ள உத்தரபிரதேசம்:

உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி குறித்து வலதுசாரிகள் பல்வேறு நியாயங்களை முன்வைத்தாலும், தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சிக்கு சமமான அளவில் உ.பி.யால்  வளர்ச்சியடைய முடியவில்லை என்பதே உண்மை. குறிப்பாக உ.பி.யில் கல்விக்கு சமமான முக்கியத்துவம் தரப்படவில்லை. குறிப்பாக 2022-23 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, உயர்கல்வியில் உ.பி.யின் மொத்தப் பதிவு விகிதம் (GER) 23.2 என்ற அளவில் மிகக் குறைந்தே காணப்படுகிறது.

எளிமையாகச் சொல்வதானால், உ.பி.யில் 18-23 வயதுக்குட்பட்டவர்களில் 23% பேர் மட்டுமே முறையான கல்வியைப் பெறுகிறார்கள். உ.பி.யுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் 46.9% ஆகும். நீண்ட காலத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 50% ஆக இருந்துள்ளது. உயர்கல்வியில் உ.பி.க்கு GER குறைவாக உள்ளது என்பது மட்டுமல்ல. 9ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கூட , உ.பி.யில் GER முறையே 69.3% மற்றும் 50.7% என்ற சதவீதத்திலேயே உள்ளது. தமிழ்நாட்டில் இது 95.6% மற்றும் 81.5% என்ற சதவீதத்தில் உள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு வரை 42.5% மாணவர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதை கீழே உள்ள அட்டவணையின் மூலம் அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் இது 72.8 சதவீதமாக உள்ளது.

உத்தரப்பிரதேசம் ஏன் கல்வியில் பின்தங்கியுள்ளது?

பணம் முக்கிய பங்கு வகிக்கிறது:

உ.பி.யில் மாணவர்கள் ஆரம்பத்திலேயே படிப்பை நிறுத்திவிட்டு உயர்கல்வியைத் தொடராமல் இருப்பதற்கு, பணமே முக்கிய காரணியாக உள்ளது. இது ஒரு மாணவன் அவனது பெற்றோரிடம் இருக்கும் பணத்தையோ அல்லது அவனது குடும்பத்தின் ஏழ்மையையோ வைத்து கணக்கிடப்படவில்லை. மாறாக இது மாணவர்களின் கல்விக்காக அரசு எந்தளவிற்கு பணம் செலவிடுகிறது என்பதையே குறிக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகையைக் கணக்கிடும்போது, ​​உ.பி.யில் மூன்று மடங்கு அதிக மக்கள்தொகை காணப்பட்டாலும் கூட, கல்விக்கான மூலதனச் செலவை பொறுத்தமட்டில் உ.பி. குறைந்த அளவே செலவு செய்கிறது. குறிப்பாக கல்விக்காக தமிழ்நாட்டை விட உ.பி. கிட்டத்தட்ட 1.5 மடங்கே அதிகமாக செலவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான உள்கட்டமைப்பு:

கல்விக்காக குறைந்த தொகையையே உ.பி செலவிட்டுள்ளதால், அங்கு கல்வி உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக காணப்படுகிறது. அங்குள்ள 60% பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாது. ஏறக்குறைய 75% பள்ளிகளில் செயல்பாட்டு கணினிகள் கூட இல்லை மற்றும் 79% பள்ளிகளில் இணைய இணைப்பு செயல்பாட்டில் இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் விட உ.பி.யில் கிட்டத்தட்ட 20% பள்ளிகளில் மின்சார இணைப்பு வசதிகள் செயல்பாட்டில் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

பள்ளிகள் குறைப்பு:

2017-18 முதல், உ.பி.யில் 26,330 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் சிறிதளவு அதிகரித்திருந்தாலும் கூட, உ.பி.யில் 2017-18 இல் பள்ளிகள் இருந்ததை விட, எண்ணிக்கை குறைந்து தற்போது 24,411 பள்ளிகளே உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு முதல் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான முன்னுரிமை குறைந்துவிட்டது:

உத்தரப்பிரதேசத்தை பொறுத்த வரையில், ஒன்றியத்தில் பத்து ஆண்டுகளும், மாநிலத்தில் ஏழு ஆண்டுகளும் பாஜக ஆட்சி செய்திருந்தாலும், அங்கு ஆட்சியில் உள்ளவர்கள் அம்மாநிலத்தின் பள்ளிகள் மற்றும் கல்வி உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், அங்குள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடியுள்ளனர்.

குறிப்பாக லவ் ஜிஹாத், கோவில்கள், மசூதிகள், நில ஜிகாத், பசு பாதுகாப்பு போன்றவற்றிற்கே அவர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். பள்ளிகளின் எண்ணிக்கையை வளர்ப்பதை விட, அங்கு வெறுப்பு பேச்சுகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதன் மூலமும் அங்கு பிரிவினைவாதம் வளர்ந்து வருவதையே காண முடிகிறது..!

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader