ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடக்கத்திற்கு இதுதான் காரணமா ?
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 4-ம் தேதி இரவு 9 மணியளவில் இருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் பல மணி நேரங்கள் முடங்கியதால் அதன் பயன்பாடுகள் பாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் நெட்வொர்க் பிரச்சனை என சந்தேகித்த மக்களுக்கு மூன்று சமூக ஊடக தளங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என பின்னரே தெரிய வந்தது.
இந்தியாவில் மட்டும் சுமார் 53 கோடி வாட்ஸ்அப் பயனர்களும், 21 கோடி இன்ஸ்டாகிராம் பயனர்களும், 41 கோடி ஃபேஸ்புக் பயனர்களும் உள்ளதால் பல மணி நேரங்கள் தொடர்ந்த முடக்கம் பயனர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தை அணுக முயற்சிக்கும் பயனர்களுக்கு, ” ஏதோ தவறு நடந்துவிட்டது. நாங்கள் அதற்கான பணியில் இருக்கின்றோம், எங்களால் முடிந்தவரை அதை சரி செய்கிறோம் ” என்ற வாக்கியம் காண்பிக்கப்பட்டு இருந்தது.
To the huge community of people and businesses around the world who depend on us: we’re sorry. We’ve been working hard to restore access to our apps and services and are happy to report they are coming back online now. Thank you for bearing with us.
— Facebook (@Facebook) October 4, 2021
உலகளாவிய செயலிழப்பு ஏற்பட்ட தருணத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், ” எங்கள் செயலிகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரையில், விரிவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.
எங்களைச் சார்ந்திருக்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் வணிகர்களின் மிகப்பெரிய சமூகத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். எங்கள் செயலி மற்றும் சேவைக்கான அணுகலை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்து வருகிறோம். அவை இப்போது ஆன்லைனில் திரும்பி வருவதாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் ” என பதிவிட்டு இருந்தனர்.
இந்த சமூக ஊடகங்களின் முடக்கத்திற்கு ஒரு நாள் முன்பாக, ” வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மற்றும் தவறான தகவலைக் கட்டுப்படுத்துவதை விட நிறுவனம்(ஃபேஸ்புக்) பலமுறை லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க தொலைக்காட்சியில் ஃபிரான்ஸ் ஹாகன் என்பவர் ஆவணங்களுடன், தன் அடையாளத்தையும் வெளிப்படுத்தி இருந்தது ” பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது அடையாளத்தை வெளிப்படுத்திய ஐயோவாவைச் சேர்ந்த 37 வயதான தரவு விஞ்ஞானி ஃபிரான்ஸ் ஹாகன், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் கூகுள் மற்றும் பின்ட்ரெஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியவர். அவர் சிபிஎஸ் செய்தி நிகழ்ச்சியான “60 நிமிடங்கள்”-க்கு அளித்த பேட்டியில் ஃபேஸ்புக் மற்றவையை விட “கணிசமாக மோசமானது ” எனக் கூறி இருந்தார்.
60 நிமிடங்கள் நேர்காணலில், ” ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். ஃபேஸ்புக் பாதுகாப்பை விட லாபத்தைத் தேர்ந்தெடுப்பதை மீண்டும் மீண்டும் காட்டுகிறது. எங்கள் பாதுகாப்போடு அதன் லாபத்தை செலுத்துகிறது. இன்று இருக்கும் ஃபேஸ்புக்கின் பதிப்பு நம் சமூகங்களை கிழித்து உலகெங்கும் இன வன்முறையை ஏற்படுத்துகிறது. நிறுவனத்தின் சொந்த ஆராய்ச்சியே, வன்மப்பதிவுகள் மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும் மக்களின் கோபத்தை தூண்டுகின்றன எனக் காட்டுகிறது. நிறுவனத்தின் செய்தி ஊட்ட வழிமுறை(News Feed algorithm) எதிர்வினை பெரும் உள்ளடக்கத்திற்கு உகந்ததாக உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் ஈடுபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அல்காரிதத்தை உருவாக்கி இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பான வகையில் அல்காரிதத்தை வைத்தால் ஃபேஸ்புக்கிற்கு பயனர்களையும், ஃபேஸ்புக் உபயோகிக்கும் நேரத்தையும், அந்த நிறுவனத்தின் லாபத்தையும் குறைக்கும் என்று அவர்களுக்கு தெரியும் ” என ஃபிரான்ஸ் ஹாகன் விளக்கி இருக்கிறார்.
இந்த நேர்காணலுக்கு பின்னர் ஏற்பட்ட செயலிழப்பு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இரண்டாவது அடியாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 2 பில்லியன் தினசரி செயலி பயனர்களை கொண்ட ஃபேஸ்புக்கின் பங்குகள் ஃபிரான்ஸ் ஹாகன் அறிக்கைக்கு பிறகு குறையத் தொடங்கியதாகவும், திங்கள்கிழமை பிற்பகல் வர்த்தகத்தில் 5.3% குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு பாதுகாப்பு குழு உறுப்பினர்களை மேற்கொள்காட்டிய தி நியூயார்க் டைம்ஸ், ” இந்த உலகளாவிய செயலிழப்பு ஒரு சைபர் தாக்குதலின் விளைவாக இல்லை. ஏனெனில், செயலிக்கு பின்னால் உள்ள தொழில்நுட்பம் வித்தியாசமானது, ஒரு ஹேக் ஒரே நேரத்தில் பல செயலிகளை பாதிக்க வாய்ப்பில்லை என்பதால் இது ஒரு சைபர் தாக்குதலால் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றனர் ” எனக் கூறி இருக்கிறது.
” பாதுகாப்பு நிபுணர்கள், இந்த செயலிழப்பு ஒரு உள் தவறுகளின்(தவறான உள்ளமைப்பு) விளைவாக இருக்கலாம், உள் தவறுகளால் பாதிப்புகள் ஏற்படுவது கோட்பாட்டளவில் சாத்தியமாகும் ” எனக் கூறுவதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Links :
Facebook and all of its apps go down simultaneously.
facebook instagram down thousands users downdetectorcom