குஜராத் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்தது பெப்சி.

சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தது. குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயிரிட்ட உருளைக்கிழங்கு வகை நாங்கள் காப்புரிமை வாங்கியவை என பெப்சி நிறுவனம் நான்கு விவசாயிகளுக்கு எதிராக குஜராத்தின் அஹமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து.
கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி தயாரித்து வரும் லேஸ் சிப்ஸ்க்காக காப்புரிமை வாங்கிய FC5 ரக உருளைக்கிழங்கை குஜராத் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் நான்கு விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது பெப்சி நிறுவனம். அதில், நான்கு விவசாயிகளும் தலா 1கோடி வழங்க வேண்டும் என பெப்சி நிறுவனம் கேட்டுக் கொண்டது.
பெப்சி மற்றும் விவசாயிகள் விவகாரம் நாடெங்கிலும் கோப அலையை ஏற்படுத்தியது. பெரு நிறுவனத்திற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பேசத் துவங்கினர். சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்தன.
பெப்சி நிறுவனம் நன்றாக விளையக்கூடிய FC5 ரக உருளைக்கிழங்கை விவசாயிகள் மூலம் பயிரிட்டு அதனை நிலையான விலைக்கு வாங்கி கொள்கிறது. அதன் மூலம் லேஸ் சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. FC5 ரக உருளைக்கிழங்கின் விதைகளை அந்நிறுவனம் விவசாயிகளுக்கு அளித்து பயிரிட செய்கிறது. ஆனால், விலையில் மாற்றம் இல்லாமல் நிலையான விலைக்கே கொள்முதல் செய்கின்றது.
வழக்கு பதிவு செய்த விவசாயிகளிடமும் இதேபோன்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. குஜராத் விவசாயிகள் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநில அரசு விவசாயிகளுக்கு நிச்சயம் உதவும் என அம்மாநில துணை முதலமைச்சர் நிதின் படேல் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்தது. குஜராத் அரசு உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திருப்ப பெற்றுக் கொள்வதாக பெப்சி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இதைப் பற்றி பேசிய விவசாயிகள் சார்பாக களமிறங்கிய வழக்கறிஞர், ” பெரு நிறுவனங்களுக்கு எதிராக சிறிய விவசாயிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. எனினும், அந்நிறுவனம் தன் முடிவை நீதிமன்றத்திற்கு அல்லது விவசாயிகள் மற்றும் அவர்களின் வழக்கறிஞருக்கு இன்னும் தெரிவிக்கவில்லை ” எனத் கூறி இருந்தார்.
நாடு முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு, விவசாய ஆதரவு, அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் பெப்சி நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்து இருக்கலாம். எதுவாயினும், இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியும். இனி விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருத்தல் அவசியம்.
PepsiCo withdraws lawsuit against four Gujarat potato farmer
Pepsico agrees to withdraw cases against Gujarat farmers