வாட்ஸ் அப் குழுவில் பொய் செய்திகளைப் பரப்பிய முன்னாள் டி.ஜி.பி நடராஜ் மீது வழக்குப் பதிவு !

முன்னாள் டி.ஜி.பி-யும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆர்.நடராஜ் வாட்ஸ் அப் மூலம் முதலமைச்சர் குறித்து போலி செய்திகளைப் பரப்பியது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “ஒரு போலிஸ் அதிகாரி. அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப்-பில் ஒரு செய்தி பதிவிட்டுள்ளார். அது தொடர்பாக வழக்குப் போட்டுள்ளேன். ‘இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அந்த ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றிபெற்று விடுவோம்’ என்று நான் சொன்னதாக என் பெயரிலேயே ஒரு போலிஸ் அதிகாரி, அதுவும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் பதிவிட்டுள்ளார். வழக்குப் போட்டுள்ளேன். இன்று பத்திரிக்கையில் வரும் பாருங்கள்” எனக் கூறினார். 

அந்த காவல்துறை அதிகாரி வேறு யாருமில்லை முன்னாள் டி.ஜி.பி.யும் அதிமுக-வை சேர்ந்த முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ். அவர் தனது வாட்ஸ் அப் குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்துக்களின் ஓட்டு தங்களுக்குத் தேவை இல்லை எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டினை பதிவிட்டுள்ளார். 

அதில் “இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிபட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குபெறும் அளவுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம்தாழ்ந்து விடவில்லை. – ஸ்டாலின்” என்றுள்ளது. 

நடராஜ் பதிவிட்ட அந்த நியூஸ் கார்டினை நியூஸ் 7 தமிழ் பதிவிடவில்லை. ஸ்டாலின் அவர்களும் அப்படி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவும் இல்லை. அப்படி தெரிவித்ததாக ஊடகங்களிலும் செய்தி வெளியிடவில்லை. மேலும் அந்த கார்டில் எழுத்து வடிவமும் சீராக இல்லை. இவற்றில் இருந்து அது போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்பதை அறிய முடிகிறது. 

இந்த போலி செய்தி மட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் 1000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்கிற தகவலையும் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதுவும் அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவலாகும்.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?

வலதுசாரிகள் தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பரப்பக்கூடியது போன்ற ஒரு பொய் பிரச்சாரத்தினை காவல்துறை உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியும் பரப்பியுள்ளார். இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி போலி செய்திப் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷீலா அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader