ஈக்களை “ஜாம்பியாக” மாற்றும் புதிய வகை பூஞ்சைகள் கண்டுபிடிப்பு| 2020 மீது மீண்டும் பழியா?

கொரோனா வைரஸிற்கு பிறகு எந்தவொரு மோசமான நிகழ்வு நடந்தாலும் 2020-ம் ஆண்டு மீது குற்றம் சுமத்தப்படுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஈக்களை ஜாம்பிகளாக மாற்றும் இரண்டு புதிய வகை கொடிய பூஞ்சைகளைக் கண்டுபிடித்து உள்ளனர் என்கிற செய்தி சர்வதேச அளவில் வெளியாகி வருகிறது. 2020 ஆண்டு நிறைவடைய சில நாட்களே மீதமுள்ள நிலையில் அதன் ஆட்டம் இன்னும் ஓயவில்லை என இச்செய்தியை வைத்து மீம்ஸ் பகிரப்பட்டு வருகிறது.
கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மற்றும் டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியானது ” Journal of Invertebrate Pathology ” எனும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க்வெல்சியா அசெரோசா மற்றும் ஸ்ட்ராங்க்வெல்சியா டைக்ரினா ஆகிய பூஞ்சை இனங்கள் ஆனது கோயனோசியா டைக்ரினா மற்றும் கோயனோசியா டெஸ்டேசியா ஆகிய ஈக்கள் இனங்களை தாக்குகின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாக ஈக்களாக தோற்றமளித்தாலும், பூஞ்சைகளின் பாதிப்பிற்கு பிறகு பயங்கரமான உடல் மாற்றத்திற்கு உட்படுகின்றன. பூஞ்சைகள் ஈக்களின் அடிவயிற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளை ஏற்படுத்திய பின்னர், நுண்ணுயிர் வித்துக்களின் கொத்துக்களை உருவாக்கின்றன. அவை துளைகளில் இருந்து வெளியேறுவதன் மூலம் பரவுகின்றன.
இந்த செயல்முறையின் போது பாதிக்கப்பட்ட ஜாம்பி ஈக்கள் பல நாட்கள் உயிருடன் இருந்தாலும், தங்களுக்கு தெரியாமலேயே நுண்ணுயிர் வித்துக்களை தொலைதூரமாக பரப்பச் செய்கின்றன. குறிப்பாக, மற்ற ஈக்களுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும் போது நிகழ்கிறது. இதற்கிடையில், பூஞ்சைகள் ஈக்களை தொடர்ந்து உயிருடனே தின்றுவிடுகின்றன. இறுதியாக, பாதிக்கப்பட்ட ஈக்கள் தரையில் விழுந்து இறக்கின்றன. இறந்த பிறகும் கூட பாதிக்கப்பட்ட பூச்சிகளில் இருந்து நுண்ணுயிர் வித்துக்கள் பரவக்கூடும் ” என livescience இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
பூஞ்சைகளால் சுரக்கக்கூடிய சக்திவாய்ந்த டோப் போன்ற இரசாயனங்கள் ஈக்களை உயிருடன் வைத்திருப்பதாகவும், இரசாயனங்கள் மற்ற நுண்ணிய உயிரினங்களையும் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து விலக்கி வைப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனினும், ஆராய்ச்சியாளர்கள் இதை இன்னும் சோதிக்கவில்லை. இப்புதிய பூஞ்சைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலும் உயிருடன் இருக்கும் ஈக்களை ” ஜாம்பி ஈக்கள் ” என அழைக்கின்றனர்.
” ஜாம்பி ஈக்கள் ” குறித்த செய்தியால் 2020-ம் ஆண்டில் மற்றுமொரு பாதிப்பு எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால், ” Zombie Flies ” எனும் வார்த்தைகளை கொண்டு தேடிப் பார்க்கையில், ” This Fungus Fires Artillery From the Backs of Zombie Flies” எனும் தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது.
” என்டோமோப்தோரா மஸ்கே பூஞ்சையால் தாக்கப்பட்ட ஈக்கள், இறப்பதற்கு முந்தைய தருணங்களில் தவறாக செயல்படத் தொடங்குகின்றன மற்றும் பூஞ்சையை பரப்புவதில் அறியாத பங்கையும் கொண்டுள்ளன. விஞ்ஞானிகள் அவற்றை ” ஜாம்பி ஈக்கள் ” என அழைக்கிறார்கள். அவை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்படுகின்றன ” எனக் கூறப்பட்டுள்ளது.
2018 ஆகஸ்ட் 10-ம் தேதி nationalgeographic ஆனது பூச்சிகளை அழிக்கும் பூஞ்சைகள் எப்படி ஈக்களை ஜாம்பியாக மாறுகின்றன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். பல ஆண்டுகளாக சில பூஞ்சைகள் ஈக்களை ஜாம்பியாக மாற்றுவது தொடர்பாக ஆராய்ச்சி கட்டுரைகள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இது 2020-ல் நிகழ்ந்த புதிய சம்பவம் அல்ல. எனினும், 2020-ல் புதிதாக இரு பூஞ்சை இனங்களை டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
Links :
Newly discovered fungi turn flies into zombies and devour them from the inside out
This Fungus Fires Artillery From the Backs of Zombie Flies
‘Insect Destroyer’ Fungus Turns Flies Into Zombies | National Geographic