This article is from Jan 24, 2022

சாணி வாங்கும் திட்டம் பற்றிய அலங்கார ஊர்தி குடியரசு நிகழ்ச்சியில் பங்குபெறுகிறது !

2022-ம் ஆண்டு குடியரசுத் தினத்திற்கான அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சத்தீஸ்கர் மாநிலத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் பசு மாட்டின் உருவமும், மாட்டு சாணத்தை கொண்டு தயாரிப்புகள் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் அரசின் ” கோதான் நியாய யோஜனா ” திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, பசுக்களை வளர்ப்போர் மற்றும் பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளப்படும்.

சாணத்தின் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருட்களை கூட்டுறவு சொசைட்டி மூலம் உற்பத்தி செய்து மாநில அரசு விற்பனை செய்கிறது. 2020 ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தில் முதற்கட்டமாக விவசாயிகள் மற்றும் பண்ணை உரிமையாளர்கள் 46 ஆயிரம் பேருக்கு ரூ1.65 கோடி பணமானது செலுத்தப்பட்டது.

குடியரசு தினத்தில் பங்கேற்கும் தங்களின் அலங்கார ஊர்தி குறித்து சத்தீஸ்கர் மாநில அரசின் மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குநர் உமேஷ் மிஸ்ரா, ” குடியரசு தின அணிவகுப்பில் சத்தீஸ்கரின் அலங்கார ஊர்தி கோதான் நியாய யோஜனா திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சாணம் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கு வாங்கப்பட்டு  மண்புழு உரம் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் பங்கு மிகப்பெரியது மற்றும் இது லட்சக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. சாணத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் இயற்கை வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப்படுகின்றன. குடியரசு தினத்தில் மாநில அரசின் திட்டத்தை நாடு முழுவதும் காண்பிக்க எதிர்நோக்கி உள்ளதாக ” ஏஎன்ஐ செய்தி முகமைக்கு தெரிவித்து இருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் 2020 ஜூலை 20-ம் தேதி ஹரேலி பண்டிகையின் போது மாட்டு சாணத்தை கிலோ ரூ.2-க்கு வாங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

குடியரசு தின அணிவகுப்பில் சத்தீஸ்கர் மாநில அரசின் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது தவறான செயல் அல்ல. ஆனால், பசு மாட்டின் உருவம் மற்றும் மாட்டு சாணத்தால் தயாரிப்புகள் செய்வது போன்ற காட்சிகள் அடங்கியதற்காகவே சத்தீஸ்கர் மாநில ஊர்தியை ஒன்றிய அரசின் தேர்வுக்குழு அதிகாரிகள் தேர்வு செய்து இருப்பார்கள் என சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader