சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிக்கப்பட்டாரா ?
இன்று அதிகாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மகாபிசேகம் விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்று இருந்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அங்குள்ள தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வைரலாகி வருகிறது.
Blessed to take part in Nataraja Temple’s Aani Thirumanjanam Mahabhisekham in Chidambaram.
Amidst thousands of devotees, prayed for COVID free nationசிதம்பரம் அருள்மிகு ஸ்ரீநடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் மஹாபிஷேகம் விழாவில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்தேன் pic.twitter.com/3b4RRR4JsY
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 6, 2022
இந்நிலையில், புதுச்சேரி பிரதேசத்தின் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், சிதம்பரம் கோவில் வளாகத்தில் உள்ள படியில் அமரக் கூடாது என உங்களை தீட்சிதர்கள் அவமதித்ததாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ” என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக வளாகத்தில் அமர்ந்து இருந்த போது என்னிடம் ஒருவர் வந்து இதற்கு அப்புறம் நிறைய இடம் உள்ளது, அங்கு போய் உட்காருங்கள் என சொன்னார். அதற்கு, இல்லை. நான் இறைவனை பார்க்க வந்துள்ளேன். அதனால் இங்கு தான் உட்காருவேன் என சொன்னேன், அவரும் போய் விட்டார். நான் படியில் கூட உட்காரவில்லை. யாரோ ஒருத்தர் சொன்னார் தான், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மற்ற தீட்சிதர்கள் என்னிடம் வந்து, இறைவனுக்கு கொடுக்கப்பட்ட மாலை, பிரசாதம் உள்ளிடவையை வழங்கினார்கள். ஒருத்தர் வந்து சொன்னார், நான் இல்லை என சொல்லவில்லை. ஆனால், நான் இறைவனை தான் பார்க்க வந்துள்ளேன் என சொன்னேன், அதனால் அவர் போய் விட்டார் ” எனப் பதில் அளித்து இருக்கிறார்.
சமீப காலங்களாக, சிதம்பரம் கோவில் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிதம்பரம் கோவிலில் நான் அவமதிக்கப்பட இல்லை என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதில் அளித்து இருக்கிறார்.