ஹத்ராஸ் பெண்ணின் நடத்தை பற்றி உ.பி பாஜக தலைவரின் மோசமான பேச்சு !
ஹத்ராஸ் இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, உ.பி பாஜக தலைவர்களின் பேச்சுகள் சர்ச்சையாகி கண்டனத்தைப் பெற்று வருகின்றன.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக உ.பியின் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது.
This is the mind set of @BJP4India leader Ranjeet Shrivastav from Barabanki… @NCWIndia @sharmarekha would your kind office dare to book such mindset’s? pic.twitter.com/4cYUZsjBx9
— Netta D’Souza (@dnetta) October 6, 2020
ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட வீடியோவில் இந்தியில் பேசும்போது, ” அந்த பெண் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். செப்டம்பர் 14-ம் தேதி(சம்பவம் நடந்த அன்று) திணை வயல்பகுதிக்கு அந்த பையனை வரச் சொல்லி இருக்க வேண்டும், ஏனெனில் இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதை ஊரே அறியும். சமூக வலைதளம், செய்தி சேனல்களில் வந்தது. அந்த பெண் கையும் களவுமாக மாட்டியிருக்க வேண்டும்.
இதுபோன்ற பெண்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இறந்து கிடக்கிறார்கள். கரும்புத் தோட்டம், சோளம் அல்லது தினை வயல்வெளிகள், புதர்கள், காட்டுப்பகுதிகள் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டெடுக்கப்படுகின்றன. ஏன் இந்த பெண்கள் நெல் வயல்களிலோ, கோதுமை வயல்களிலோ இறந்து போவதில்லை ? இதுபோன்ற குற்றங்கள் நிகழும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணை இழுத்துச் செல்லப்படுவதை நேரில் பார்த்த சாட்சி யாரும் இருப்பதில்லை.
இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கைது செய்த நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும். நான் உறுதியுடன் கூறுகிறேன், அந்த நான்கு பேரும் நிரபராதிகள். அவர்களை விடுவிக்கவில்லை என்றால், அவர்கள் மனரீதியான துன்பத்தை அனுபவிக்க நேரிடும். அவர்கள் இளமையை இழந்தால் யார் கொடுப்பார்கள் ? அவர்களுக்கு அரசு இழப்பீடு கொடுக்குமா ? ” எனப் பேசி உள்ளதாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா ஹத்ராஸ் பெண் நடத்தையை மட்டுமின்றி பாலியல் வன்புணர்வு செய்து இறந்து போகும் மற்ற பெண்களின் நடத்தையையும் தவறாக பேசி இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்களின் நடத்தைப் பற்றி பேசிய பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா 44 கிரிமினல் வழக்குகளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேச்சு :
இதற்கு முன்பாக உத்தரப் பிரதேசத்தின் பல்யா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்த போது, ” அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை(பாலியல் வன்கொடுமை) தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும். அரசும், நல்ல பண்புகளும் இணைந்தால் நாடு சிறப்பாக செய்யப்பட முடியும் ” என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
பாஜக முன்னாள் எம்எல்ஏ :
இதேபோல், ஹத்ராஸ் பகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ ராஜ்வீர் சிங் பெஹெல்வான் குற்றம்சாட்டப்பவர்களுக்கு ஆதரவாக பேசி இருந்ததும், அவரின் வீட்டின் முன்பாக உயர் வகுப்பினர் சந்திப்பு கூட்டம் உள்ளிட்டவையும் நிகழ்ந்து இருக்கிறது.
விரிவாக படிக்க : ஹத்ராஸ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர், வலதுசாரி அமைப்புகள், ஆதிக்க சாதியினர் ஒன்றுகூடினர் !
ஹத்ராஸ் இளம்பெண் விவகாரத்தில் சாதி மற்றும் அரசியல் உட்புகுந்து விட்டதை நன்கு அறிய முடிகிறது. அம்மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சேர்ந்த சிலர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
Links :
Such women are always found dead in millet fields: BJP leader’s shocking remark on Hathras victim
Incidents like rape can only be curbed by ‘value-based’ upbringing of girls: BJP MLA Surendra Singh