பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் ஏழ்மை நிறைந்த மாநிலங்கள் – நிதி ஆயோக் குறியீடு!
நிதி ஆயோக் வெளியிட்ட பல பரிமாண வறுமைக் குறியீட்டில் இந்தியாவில் ஏழ்மை நிறைந்த மாநிலங்களாக பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.
தேசிய குடும்ப சுகாதார கள ஆய்வு(2015-16)-ஐ அடிப்படையாகக் கொண்டு தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் பல பரிமாண வறுமைக் குறியீடு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் இளம்பருவ இறப்பு, பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சுகாதாரம், சமையல் எரிபொருள், குடிநீர், மின்சாரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட 12 அம்சங்களால் குறிப்பிடப்படுகின்றன.
2021 பல பரிமாண வறுமைக் குறியீட்டில், அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91% மக்கள் வறுமையில் உள்ளனர். ஜார்கண்டில் 42.16% மக்களும், உத்தரப் பிரதேசத்தில் 37.79% மக்களும் வறுமையில் உள்ளனர். இந்த மூன்று மாநிலங்களும் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் மோசமான நிலையில் உள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக, மத்தியப் பிரதேசம் 36.65%, மேகாலயா மற்றும் அசாம் 32.67%, சத்தீஸ்கர் 29.91%, ராஜஸ்தான் 29.46%, ஒடிசா 29.35% மக்களுடன் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதில், கேரளா 0.71%, கோவா 3.76%, சிக்கிம் 3.82%, தமிழ்நாடு 4.89% மக்களுடன் குறியீட்டில் இறுதி இடங்களில் இடம்பிடித்துள்ளன.
இதேபோல், ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பீகார் 51.88% உடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, ஜார்கண்ட்(47.99%), மத்தியப் பிரதேசம்(45.49%), உத்தரப் பிரதேசம் (44.47%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கேரளா(1.73%), சிக்கிம்(5.42%), தமிழ்நாடு(6.70%) ஆகியவை இறுதி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.