அங்கே எல்லையில் இராணுவம்… 7 ஆண்டுகளில் 787 வீரர்கள் தற்கொலை !
2014 முதல் தற்போது வரை சுமார் 787 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதாக மத்திய அரசு அளித்த தரவின் மூலம் தெரியவந்துள்ளது.
2021 மார்ச் 4ம் தேதி மூன்று இராணுவ வீரர்கள் காஷ்மீரில் தூக்கிட்டு தற்கொலை, 2020ல் ஒரு இராணுவ வீரர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை, 2019 மார்ச் 21ம் தேதி அஜித் குமார் எனும் ராணுவ வீரர் தனது சேவை துப்பாக்கியை எடுத்து உடன் பணிபுரியும் மூன்று இராணுவ வீரர்களை சுட்டுவிட்டு தானும் தற்கொலை என இந்திய இராணுவ வீரர்களின் தற்கொலை குறித்தான செய்திகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, காஷ்மீரில் பணிபுரியும் வீரர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகி உள்ளது .
கடந்த திங்கள் அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், 2014 முதல் 2021 வரை 591 இராணுவ வீரர்கள், 36 கடற்படை வீரர்கள், 160 விமானப்படை வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக கூறினார். இதில் தன் சொந்த படைவீரர்களையே கொலை செய்த சம்பவங்கள் இராணுவத்தில் 18 முறையும், விமானப்படையில் இருமுறையும் நடந்துள்ளது என குறிப்பிட்டார்.
2020 டிசம்பரில் United Service Institution of India (USI) எனும் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளரான கேர்னல் ஏ.கே.மோர் வெளியிட்ட ஒரு ஆராய்ச்சி அறிக்கையானது, பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளின் தொடர்ச்சியான பாதிப்புகளால் இந்திய இராணுவ வீரர்களின் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மேலாண்மை நடவடிக்கைகள் அதற்கான பலனை தரவில்லை என ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
தலைமையின் இயலாமை, பணி சுமைகள், பதவி உயர்வுகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை , இடப்பெயர்வுகள், போதிய ஊதியம் மற்றும் வளங்கள் இல்லாதது போன்ற காரணங்களாலே இராணுவ அதிகாரிகள் மன அழுத்தம் உண்டாவதாக குறிப்பிடுகிறது.
Indian Army losing more personnel every year in suicides, fratricides and untoward incidents than in any enemy action and over half of its soldiers seem to be under severe stress presently: United Service Institution of India
— Press Trust of India (@PTI_News) January 8, 2021
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், “ இராணுவ வீரர்களின் மனநல பிரச்சினைகளை கையாள்வதற்கும் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகளை வகுத்துள்ளன” என்றார்.
மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும் , மனநல ஆலோசனை சேவைகள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த மனநல மருத்துவர்களால் இராணுவத்தில் உள்ள 23 மனநல மையங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். “மிஷன் ஜிந்தகி” யின் ஒரு பகுதியாக மனநலம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Links :
over-half-of-army-personnel-under-severe-stress-study
787-incidents-of-suicide-reported-in-armed-forces-since-2014-govt-data