சட்டப்பிரிவு 370 தொடர்பான சில தவறான புரிதல்களும், தெரியாதவையும்!

காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பிரிவு 370 தீர்மானத்திற்கு முன்பும், பின்பும் உள்ள மாறுதல்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. அவ்வாறு கூறப்படுபவைகளில் இணையத்தில் பரவும் தவறான புரிதல் சிலவற்றை காண்போம்.
இரட்டைக் குடியுரிமை :
பல தலைமுறைகளாக, காஷ்மீரி இன மக்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்கின்றனர். இந்தியன் காஷ்மீரிகள் உள்பட யாருக்கும் இந்தியா இரட்டை குடியுரிமைக்கு அனுமதி அளிப்பதில்லை.
சட்டப்பிரிவு 370-ன் படி காஷ்மீரிகளின் இரட்டைக் குடியுரிமை என்பது அவர்கள் இந்திய குடிமகன் மற்றும் காஷ்மீரின் குடிமகன்கள் என்பதையே குறிக்கிறது. காஷ்மீரை சேராத மக்கள் அங்கு வசித்தால் அவர்கள் இந்தியாவின் குடிமக்கள் மட்டுமே.
இதில், சிலர் இரட்டைக் குடியுரிமை என்பதை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்றும், அங்குள்ள மக்களால் பாகிஸ்தானிற்கு செல்ல முடியும் என தவறான வாட்ஸ் அப் வதந்திகள் பரவி வருகின்றன.
மேலும் படிக்க : சட்டப்பிரிவு 370-க்கு எதிராக அம்பேத்கர் கூறிய கருத்தா ? வைரலாகும் பதிவு !
தனிக்கொடி :
1952 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு என தனிக்கொடி இருந்து வருகிறது. எனினும், அரசு நிகழ்ச்சிகளில் மாநில கொடி மட்டுமின்றி இந்திய தேசியக் கொடியும் ஏற்றப்பட வேண்டும் என்ற ஆணை உள்ளது. தீர்மானத்தின் மீதான குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்திய தேசியக் கொடி மட்டுமே பறக்கவிடப்படும்.
நிதி அவசரநிலை :
சட்டப்பிரிவு 360-ன் கீழ் நிதி அவசரநிலையை காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால், இனி அமல்படுத்த முடியும். இதற்கு முன்பாக, போர் அல்லது அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு போது மட்டுமே அவசரநிலையை மேற்கொள்ள முடியும்.
எனினும், இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் சட்டப்பிரிவு 360-ன் கீழ் நிதி அவசரநிலையை எந்தவொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் அமல்படுத்தியதாக தெரியவில்லை.
சிறப்பு அதிகாரங்கள் :
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டுமே சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலமாக இருப்பதாக தவறாக நினைக்கின்றனர். காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 போன்று சட்டப்பிரிவு 371 மூலம் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் அவர்களின் தேவைக்கேற்ற சிறப்பு சலுகைகள் பெற்றுள்ளன.
உதாரணமாக, சட்டப்பிரிவு 371டி மற்றும் இ படி ஆந்திரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்வது உள்ளிட்ட மாநில அரசின் மீது ஜனாதிபதிக்கு சில சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. 371 ஏ முதல் ஜே வரையில் நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், ஆந்திரா, அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் நடைமுறையில் உள்ளன.
ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு :
ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004-ன் படி, அம்மாநிலத்தில் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவர். சிறுபான்மை இன மக்களுக்கு 16% இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது.
இனி சிறுபான்மையினருக்கு 16% வழங்கப்படும் என பகிரப்படுகிறது. அவ்வாறான தகவல்கள் எங்குமில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு குறித்தே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலம் வாங்க இயலாது :
காஷ்மீர் மாநிலத்தில் வேறு மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாது. தீர்மானத்திற்கு பிறகு அங்கு மற்றவர்கள் நிலம் வாங்க முடியும். ஆனால், காஷ்மீரில் மட்டுமே இதுபோன்ற நிலம் தொடர்பான சட்டம் இருப்பதாக நினைக்கின்றனர்.
உதாரணமாக, கர்நாடகா மாநிலத்தில் ஒரு விவசாயியால் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க முடியும். அஸ்ஸாம், திரிபுரா, இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டம் :
மத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் காஷ்மீர் மாநிலத்தில் இனி நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டு வருகின்றனர். அது பொருந்தாத தகவல். மத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு ஒரு வருடம் முன்பாகவே ஜம்மு-காஷ்மீரில் தகவல் அறியும் சட்டம் 2004 முதல் நடைமுறையில் உள்ளது. எனினும், மத்திய சட்டத்தை நீண்ட காலமாக மாநில அரசு அங்கீகரிக்கவில்லை.
2007-ல் மாநிலத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மத்திய சட்டத்தின் படி திருத்தப்பட்டது. இருப்பினும், அதன் எல்லைக்குள் உயர்நீதிமன்றம் மற்றும் தனியார் அமைப்புகளை உட்படுத்தாத காரணத்தால் விமர்சனத்தை பெற்றது.
பெண்களின் உரிமை :
காஷ்மீர் பெண்கள் பிற மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால் தங்களின் குடியுரிமை மற்றும் வாழ்விட உரிமையை இழப்பார்கள் என சில பதிவுகளால் தவறாக பகிரப்பட்டன. பிரிவு 35-ஏ படி, ஒரு காஷ்மீர் பெண் காஷ்மீர் அல்லாதவரை திருமணம் செய்தால் சொத்து உரிமையை மட்டுமே இழக்கிறார். அவர் தொடர்ந்து ” காஷ்மீர் குடிமக்களாக ” இருப்பர்.
2002-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், நிரந்தர குடியுரிமை கொண்டவரின் மகள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால் அவரின் குடியுரிமையை இழக்கமாட்டார் எனத் தெரிவித்து இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சில தவறான புரிதல்களும், பொருந்தாத தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றனர். சர்ச்சையான கருத்துக்களை பகிர்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு பகிருங்கள்.
Proof :
Land acquisition: Karnataka eases norms for people not engaged in agriculture
J&K women marrying non-natives don’t lose residency rights: Expert
Not Just J&K, India’s Constitution Provides Special Powers to 10 States
What is true and what isn’t on J&K, Article 370
The Jammu and Kashmir Reservation (Second Amendment) Bill, 2019
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.