This article is from Aug 08, 2019

பாதிக்கப்பட்ட காஷ்மீரிகள் என தவறான புகைப்படத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் !

காஷ்மீர் சட்டப்பிரிவு 370 திரும்பப்பெற்ற தீர்மானத்திற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பாகிஸ்தான் நாட்டின் சமூக வலைதளவாசிகள் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் காஷ்மீர் தொடர்பான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறான பதிவுகளில் தவறான செய்திகளும் ஆக்கிரமித்து உள்ளன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகையாளர் அமீர் அப்பாஸ் என்பவர் காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்தும், அவர்களின் நிலை குறித்தும் இரு புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை ஆயிரக்கணக்காக ட்விட்டர் வாசிகள் ரீட்விட் செய்துள்ளனர்.

காஷ்மீரில் தற்பொழுதுள்ள நிலைமையுடன் தொடர்புப்படுத்தி இவ்விரு புகைப்படங்களையும் அமீர் அப்பாஸ் பதிவிட்டு இருக்கிறார். அதில், முகமெல்லாம் இரத்த காயங்கள் தெறித்தது போன்று ஒரு படமும், இருவர் அழுவது போன்று மற்றொரு படமும் இடம்பெற்று இருந்தன.

உண்மை என்ன ?

பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகையாளர் பகிர்ந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து தேடுகையில், ” 2017-ல் ஐ.நாவில் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான மலீகா லோதி காஷ்மீர் மக்களை இந்தியா கொடூரமாக நடத்துவதற்கு ஆதாரம் என இப்புகைப்படத்தை காண்பித்து பேசியிருந்தார்.

ஆனால், மலீகா லோதி காண்பித்த புகைப்படங்கள் காஷ்மீர் பகுதியை சேர்ந்தவை அல்ல, 2014-ல் காஸா போரில் பாதிக்கப்பட்ட 17-வது பெண்ணின் புகைப்படம் என பிபிசி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது மீண்டும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் என தவறாகப் பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில் 2012-ல் Kashmir global என்ற தளத்தில் வெளியாகி இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால், இப்படங்கள் அதற்கும் முந்தையது.

” KASHSMIRI MUSLIM GIRLS CRY OVER THE DETENTION OF THEIR RELATIVE AFTER AN EXPLOSION IN SRINAGAR ” என்ற தலைப்பில் இப்புகைப்படமானது 2004-ல் ஸ்ரீநகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் பொழுது உறவினருக்காக காஷ்மீர் பெண் கண்ணீர் விடுவதாக குறிப்பிட்டு வெளியாகி இருந்தது. அந்த குண்டு வெடிப்பில் இறப்புகள் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

முடிவு :

கிடைத்த ஆதாரங்களின் படி, பிற நாட்டைச் சேர்ந்த புகைப்படத்தையும், பல ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து சமீபத்திய நிகழ்வுடன் பாகிஸ்தான் பத்திரிகையாளர் பகிர்ந்து உள்ளார். புகைப்படங்கள் தவறாகப் பகிரப்படுகின்றன என்பதை விளக்குவதே இக்கட்டுரை.

Proof : 

Kashmir fake photo: Fallout from the UN speech by Pakistan’s Maleeha Lodhi

KASHSMIRI MUSLIM GIRLS CRY OVER THE DETENTION OF THEIR RELATIVE AFTER AN EXPLOSION IN SRINAGAR.

Please complete the required fields.




Back to top button
loader