கீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன!
2020 பிப்ரவரி 19-ம் தேதி கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக தொல்லியல் துறை தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த போது கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மே 20-ம் தேதியில் இருந்து சமூக இடைவெளி உடன் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களைக் கொண்டு அகழாய்வு பணிகள் நடைபெறத் துவங்கின.
இம்முறை கீழடி பகுதி மட்டுமின்றி கூடுதலாக மணலூர், அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மணலூர் எனும் பகுதியில் உலை போன்ற அமைப்பு கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உலை போன்ற அமைப்பு குறித்து தொல்லியல் துறையின் துணை இயக்குனர் ஆர்.சிவானந்தன் , ” சுட்ட களிமண்ணைக் கொண்டு உருவான இந்த அமைப்பு 60 செ.மீ ஆழமும், 1 மீட்டர் விட்டமும் கொண்டது. இது ஒரு பெரிய கட்டமைப்பின் பகுதியாக இருக்கின்றதா எனத் தெரியவில்லை, தற்போதைய அகழிக்கு அருகில் ஒரு அகழியை தோண்டிய பின்னரே இதைப் பற்றி அறிய முடியும் ” எனக் கூறியுள்ளார்.
” கீழடியிலும் பெரிய அளவிலான எலும்புகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கீழடி பகுதியில் முன்பு கிடைத்த எலும்புகளை ஒப்பிடும் பொது தற்போது கிடைத்த எழுப்புகள் உருவத்திலும், அளவிலும் மாறுபட்டு பெரிதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், முழுமையான ஆய்வுக்குப் பிறகே அது என்ன விலங்கு என்பது தொடர்பான விவரம் தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளார்கள்”.
கடந்த 2014-2015-ம் ஆண்டில் இருந்து மத்திய, மாநில தொல்லியல் துறை மூலமாக கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. பின்னர் 2017-ல் தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் விலங்கின் எலும்புகளும், மணலூரில் உலை போன்ற அமைப்பு கிடைத்தது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்து இருக்கிறது.
Link :
Furnace-like structure, bone of an animal unearthed at Keezhadi