அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாகவும், இரு தரப்பினர் இடையே அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டு வருவதாகவும் கிஷோர் கே சுவாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கிஷோர் கே சுவாமி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலகம் விளைவிக்கும் உள்நோக்கம், ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவின் மோடி ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிற அரசியல் கட்சியினர் தொடர்பாக இழிவான வார்த்தைகளுடன் கருத்துகளை பதிவிடுவதோடு பல்வேறு வதந்திகளையும் பரப்பி இருக்கிறார். அவர் பரப்பிய பல வதந்திகளை யூடர்ன் உடைத்து கட்டுரைகளை வெளியிட்டு உள்ளோம்.
இஸ்லாமிய மத வதந்திகள் :
கடந்த செப்டம்பர் மாதம் இந்து பெண்ணுக்கு இஸ்லாமிய மௌலானா ஒருவர் போதைப் பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்ட போது அவரை இந்து செயல்பாட்டாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார் என வலதுசாரிகளால் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பொய்யான வீடியோவை பரப்பி இருந்தார்.
விரிவாகப் படிக்க : இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ
அதே செப்டம்பர் மாதம் கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய முஸ்லீம் மாணவிகளை ஹராம் எனக் கூறி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விரட்டி அடித்ததாக வதந்தியைப் பரப்பி இருந்தார்.
விரிவாகப் படிக்க : கேரளாவில் முஸ்லீம் மாணவிகள் ஓணம் கொண்டாடுவது ஹராம் எனக் கூறி மத அடிப்படைவாதிகளால் விரட்டப்பட்டனரா ?
2020ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ரூபாய் நோட்டுகளில் எச்சில் துப்பி சாலையில் வீசியதாகவும், அதை யாரென்று முடிவு செய்து கொள்ளுங்கள் என வதந்தி ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அந்த பணம் ராம் நரேந்திர யாதவ் என்பவர் தவறுதலாக தொலைத்த பணம் என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
விரிவாகப் படிக்க : மேற்கு வங்க சாலையில் எச்சில் துப்பி ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா ?
சிறுபான்மையினர் நல அமைச்சகம் :
கடந்த மாதம், ” சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை மோடி அரசு நீக்க உள்ளது. ஆனால், நலத் திட்டங்கள் தொடரும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் தேவையில்லை ” என்ற செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால், அது போலியானச் செய்தி என அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
விரிவாகப் படிக்க : சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை மோடி அரசு கலைக்க உள்ளதா ?
கத்தார் இளவரசி பற்றி அவதூறு வதந்தி :
கடந்த 2020ம் ஆண்டு கத்தார் நாட்டின் இளவரசி பிரிட்டன் நட்சத்திர ஓட்டல் அறையில் 7 ஆண்களுடன் இருக்கும் பொழுது கைது செய்யப்பட்டு உள்ளதாகப் பொய்யான செய்தியை பரப்பி இருந்தார்.
விரிவாகப் படிக்க : கத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா ?
அரசியல் வதந்திகள் :
கடந்த சில ஆண்டுகளாகவே மதம் சார்ந்து வதந்திகள் பரப்பியது போல் திமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் குறித்த தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளையும் பரப்பி இருக்கிறார்.
1. மு.க.ஸ்டாலின் திருமணத்தில் காமராஜர் கலந்து கொண்டாரா ? இல்லையா ?
2. இருசக்கர வாகனத்தில் மது கடத்திய பெண் விசிக-வைச் சேர்ந்தவரா ?
3. பெரிய கோவில் குடமுழுக்கிற்கு நாம் தமிழர் கட்சி நன்கொடை வசூலித்ததா ?
4. நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீர வணக்கம் செலுத்தியதாக வதந்திப் பரப்பும் வலதுசாரிகள் !
5. திமுக எம்.பி செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்ததாக பரப்பப்படும் பொய் வீடியோ !
6. சென்னை சாலை பணிகளில் வெளிநாட்டவர்கள்.. உண்மை என்ன ?
கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் ஆகியோரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து சர்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக எழுந்த புகாரில் கிஷோர் கே சுவாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.