This article is from Jan 11, 2019

” ஜெ மரணத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கலாம் ” -மேத்யூவ் சாமுவேல்.

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூவ் சாமுவேல் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை குறித்த புலனாய்வு விசாரணையை டெல்லியில் வெளியிட்டு உள்ளார்.

யார் இந்த மேத்யூவ் சாமுவேல் ?

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராகப் பணியாற்றிய மேத்யூவ் சாமுவேல் ஊழல் குறித்த புலனாய்வுகளை மேற்கொண்டு செய்தியை வெளியிட்டு வந்துள்ளார். அவர் பணியாற்றிய தெஹல்கா பத்திரிகையின் மூலம் 2001 புலனாய்வில் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல் குறித்த உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.

அப்பொழுது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் நிகழ்ந்த ராணுவ ஊழல் குற்றச்சாட்டைச் ஏற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் பிஎஸ்கே சௌத்ரிக்கு பதவி பறிக்கப்பட்டதோடு, ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.

தெஹல்கா பத்திரிகையில் இருந்து வெளியேறிய மேத்யூவ் நாரதா என்ற புலனாய்வு தொலைக்காட்சி நிறுவனத்தை மேற்கு வங்கத்தில் தொடங்கினார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 12 அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் லஞ்சம் கொடுக்கல் வாங்கலை ஏற்றுக் கொண்டதாக 2016 சட்டசபைத் தேர்தல் நேரத்தில் புலனாய்வு குறித்த வீடியோ வெளியாகியது. இதற்கு முன்பாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் சிக்கி இருந்தனர்.

எனினும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதன்பின், புலனாய்வில் குறிப்பிட்ட 12 அமைச்சர்கள் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர உத்தரவு பிறப்பித்து இருந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் சி.பி.ஐ விசாரணையில் நாரதா சேனலின் மேத்யூவ் சாமுவேலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேத்யூவ் சரியான ஒத்துழைப்பு அழைக்கவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், தனக்கு தெரிந்த விசயங்கள் அனைத்தும் கூறிவிட்டேன், என்னிடம் இருந்த வீடியோ ஆதாரத்தையும் அளித்து விட்டேன் என மேத்யூவ் தெரிவித்து இருந்தார்.

கோடநாடு எஸ்டேட் : 

தெஹல்கா முதல் நாரதா வரையிலான புலனாய்வுகளில் பணியாற்றி வரும் மேத்யூவ் தற்போது கோட நாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலைகள், கொள்ளை குறித்த புலனாய்வு விசாரணையின் விவரங்களை டெல்லியில் இன்று(ஜனவரி 11) வெளியிட்டு உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோட நாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலைகள் குறித்த புலனாய்வில் இறந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த பதிலை வீடியோவில் தெரிவித்து உள்ளார். கோடநாடு எஸ்டேட் சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர்.

கோட நாடு எஸ்டேட் பங்களாவில் 2000 கோடி அளவிற்கு பணம் மற்றும் நகைகள், ஆவணங்கள் இருந்துள்ளது என புலனாய்வு வீடியோவில் மேத்யூவ் தெரிவித்து இருக்கிறார். பங்களாவில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தியதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரிடையாக அளித்த பதில்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியது ஜெயலலிதா  மற்றும் சசிகலா அவர்களிடம் ட்ரைவராக பணியாற்றிய கனகராஜ் என குறிப்பிட்டுள்ளனர்.  ட்ரைவர் கனகராஜ் விபத்தில் இறந்து உள்ளார். இதேபோன்று அந்த கொள்ளையில் தொடர்பு உடைய கனகராஜ் நண்பர் சயன் மீதும் கார் விபத்து நிகழ்ந்து உள்ளது. அதில் அவரின் மனைவி வினு பிரியா, குழந்தை நீது இறந்து விட்டனர். இந்த வீடியோவில் சயன் கூறியது, ” இதற்காக கேரளாவில் இருந்து ஆட்கள் வேண்டும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டாம் என கனகராஜ் கூறினார். முதலில் பங்களாவில் இருக்கும் ஆவணங்களை எடுக்க வேண்டும் அதை முதல்வர் பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக 5 கோடி கொடுப்பதாக கனகராஜ் கூறினார் “.

வீடியோவில் கொள்ளை குற்றத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் மனோஜ் பேசியிருக்கிறார்.  அவர் கூறியது. ”  ஆவணங்களுடன் ரூ.2000 கோடி மதிப்பிலான பணம், நகை எடுக்க வேண்டும் அதை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும். 2000 கோடியை எடுத்துக்க இனோவா மற்றும் என்டிவர் கார் போதுமா என கனகராஜ் என்னிடம் கேட்டார். நான் சயனிடம் கேட்ட போது இதைப் பற்றி பயம் கொள்ள வேண்டாம், இதற்கு பின்னால் முக்கியமான புள்ளி இருக்கிறார்கள். நாம் இதை தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்காக செய்கிறோம்  எனக் கூறினார் ” என தெரிவித்து உள்ளார். மேலும், கனகராஜ் பங்களாவில் எது எது எங்கு இருக்கும், எந்த கண்ணாடியை உடைக்க வேண்டும் என முழுமையான விவரத்தை அளித்ததாகவும், அங்கு மூன்று கோடி ரூபாய் இருந்ததாக குறிப்பிட்டார். அதை யாரும் பார்க்கவில்லை. வேறு ஆவணங்கள் கிடைத்த உடன் கனகராஜ் போலாம் என கிளம்பி விட்டார் என மனோஜ் தெரிவித்து உள்ளார்.

வீடியோவில் குறிப்பிடப்பட்ட ட்ரைவர் கனகராஜ் மட்டுமே கொள்ளை திட்டத்தை தீட்டியதாக சித்தரிக்கப்பட்டது போன்று இருப்பதாக தோன்றுகிறது. காரணம், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மறைக்கப்பட்டன.  கொள்ளை நடந்த சில நாட்களில் பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மேத்யூ தெரிவித்து இருக்கிறார்.

தினேஷ் உடைய தந்தை மேத்யூவ் உடைய வீடியோவில் பேசியுள்ளார். 7 ஆண்டுகளாக தினேஷ் அங்கு பணியாற்றி உள்ளார். தற்கொலை செய்த போதும் மட்டும் விசாரிக்க போலீஸ் வந்தனர். அதன் பின் போலீஸ் வரவில்லை என தினேஷின் தந்தை தெரிவித்து உள்ளார். மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றுகிறதா என கேட்கப்பட்டதற்கு எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, எல்லாம் உடனடியாக நடந்தது என கூறினார்.

ஆவணங்கள், சிடி, pendrive, hard disk போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவற்றை கொள்ளையடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற இது செய்யப்பட்டுள்ளது.

கோட நாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட போது கொள்ளை அடிக்க வந்தவர்களிடம் இருந்து வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து உள்ளனர். ஆனால், வாட்ச் போன்ற பொருளுக்காகவா கொலை செய்வார்கள் என மேத்யூ கேள்வி எழுப்புகிறார். இதனால் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா என்று கேள்வி எழுகிறது. எடுக்கப்பட்ட ஆவணப்படம் பொது வெளியில் வெளியிடுவதன் மூலம் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டறிய முடியும் என தெரிவித்து உள்ளார்.

அப்போது செய்திகளில் ஜெயலலிதா எழுதிய உயில் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுக்காக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என வெளியாகியது. கோடநாடு எஸ்டேட்டில் கொலைகள், கொள்ளை நடந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் அப்போது தெரிவித்து இருந்தார்.

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேத்யூவ், ” கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கு, ஜெயலலிதா மரணத்திற்கும் கூட  எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா அமைச்சர்கள் பற்றி வைத்து இருந்த ஆவணங்களை கைப்பற்ற இவ்வாறு செய்து இருக்கலாம் என கூறியுள்ளார்.

மேத்யூவ் புலனாய்வில் கோடநாடு எஸ்ட்டேட் பங்களாவில் கொலைகள், கொள்ளைகள் திட்டம் தீட்டி நிகழ்ந்தது போன்று தோன்றுகிறது. யாருக்காக யார் செய்தார்கள் என்பது யூகிக்க முடியாத ஒன்று. இந்த கொள்ளையில் திட்டம் தீட்டியதாக கூறப்படும் சசிகலாவிடம் ட்ரைவராக இருந்த கனகராஜ் இறந்த உடன் அந்த மர்மம் மறைந்து விட்டது.

Major General shown the door in Tehelka case

Narada sting case: CEO Mathew Samuel appears before CBI

Controversy borne out of Tehelka sting op had no substance in it: Jaya Jaitly

What is Narada sting operation case: Everything you need to know

CBI says Mathew Samuel not cooperating in Narada scam

Please complete the required fields.




Back to top button
loader