This article is from Feb 11, 2021

“கூ” செயலிக்கு மாறும் அமைச்சர்கள்.. சீன நிறுவனத்தின் முதலீடு உள்ளதா ?

75 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாய போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். போராட்டத்தை ஆதரிப்பவர்கள் காலிஸ்தான்கள், பிரிவினைவாதத்தை தூண்டுபவர்கள் அவர்களின் ட்விட்டர் கணக்கை முடக்கவேண்டும் என மத்திய அரசு ட்விட்டர் தளத்திற்கு கோரிக்கை வைத்தது.

ஆனால், அவற்றை முழுவதுமாக அமல் செய்ய முடியாது என்றும், அது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி என்றும் விளக்கம் அளித்த ட்விட்டர் தளம் தவறான பதிவுகளை நீக்குவது உள்ளிட்ட பிற நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்தது.

விவசாய போராட்டத்திற்கு ஆதரவான பிரபலங்களின் பதிவுகளில் லைக் செய்தார் ட்விட்டர் தளத்தின் CEO ஜாக். இது மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிகிறது என்றும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ட்விட்டர் உடன்படவில்லை என்பதாலும் இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் மாற்று தளமாக ” கூ ” செயலிக்கு மாறி வருகின்றனர்.

https://twitter.com/PiyushGoyal/status/1359058583934013442

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தொடர்ந்து பலரும் கூ செயலிக்கு நாங்கள் மாறிவிட்டோம் என்று அதை பிரபலப்படுத்தி வருகின்றனர். இதேபோல், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான், நிதி ஆயோக் எனும் மத்திய கொள்கை குழு என பலரும் கூ செயலியில் கணக்கு தொடங்கியதாக பதிவிட்டனர்.

” கூ ” செயலி போம்பிநெட் டெக்னலாஜிஸ் என்ற பெங்களூர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதமே அறிமுகம் செய்யப்பட்டது. அப்ரமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா எனும் இரு இந்தியர்களே இச்செயலியை உருவாக்கியவர்கள்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட “கூ” செயலி குறித்து, மக்கள் தாய் மொழியில் தகவல்களை பகிரலாம் என பேசியதை மயங்க் பித்வக்தா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

கூ செயலியில் ட்விட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்கள் போல் பெரிதாக தனிநபர் விவரங்கள் ஏதும் தேவையில்லை, தொலைபேசி எண் உள்ளிட்ட சில விவரங்கள் இருந்தாலே போதும் OTP மூலம் கணக்கை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையில், கூ செயலியில் தனிநபர் தரவு கசிவு மற்றும் அதன் முதலீட்டாளர்கள் குறித்த சர்ச்சை எழுத் தொடங்கியது. தங்கள் நிறுவனத்தில் சீன முதலீடு இருப்பதாக கூ செயலியில் நிறுவனரே தெரிவித்ததாக சர்ச்சை பெரிதாகியது.

எலியட் ஆல்டொர்ஸன் என்ற புனைப்பெயர் கொண்ட ஹேக்கர் இந்த கூ செயலியில் பல பாதுகாப்பு குறைகள் உள்ளதாகவும், அது தொலைபேசி எண், தனிநபர் இமெயில் முகவரி உள்ளிட்ட பல விவரங்களை பாதுகாப்பின்றி வைத்து உள்ளதை ஆதாரங்களுடன் பதிவிட்டார். இவர் இதற்கு முன்னர் மத்திய அரசின் ” ஆரோக்கிய சேது ” செயலியில் உள்ள பாதுகாப்பு குறைகளை எடுத்து பதிவிட்டது பெரும் சர்ச்சை ஆனது. மேலும் இந்த செயலியின் டொமைன் சீன நிறுவனத்தின் பெயரில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீன முதலீடு குறித்து பதில் அளிக்கும் வகையில், கூ செயலியின் நிறுவனர் அப்ரமேய ராதாகிருஷ்னன் தனது ட்விட்டரில் ” கூ இந்திய முதலீட்டார்களால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 2.5 ஆண்டுகளுக்கு முன்பு நிதி திரட்டப்பட்டது. போம்பிநெட் டெக்னலாஜிஸ் உடைய சமீபத்திய நிதியானது 4-ல் 3 எனும் மூலதனத்தில் உண்மையான இந்திய முதலீட்டாளர்களால் நடத்தப்படுகிறது. எங்கள் வோகல் பயணத்தில் இருந்து சீன பங்குதாரர் ஷுன்வெய் (ஒற்றை இலக்க பங்கு தான்) விரைவில் முழுவதுமாக வெளியேற உள்ளார் ” என்று குறிப்பிட்டு உள்ளார்.

வோகல் எனும் பகிர்வு செயலி மற்றும் கூ ஆகிய இரு செயலிகளும் போம்பிநெட் டெக்னலாஜிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. இதில், வோகல் செயலி 2018-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஷுன்வெய் மூலம் நிதி திரட்டப்பட்டது. அந்த சீன முதலீட்டாளர் முழுவதுமாக வெளியேற உள்ளதாக கூ செயலியின் நிறுவனர் கூறுகிறார்.

இதேபோல், தனிநபர் தரவுகள் கசிந்ததாக கூறுவது தவறான குற்றச்சாட்டு, இது பொதுவாக அனைத்து பயனர்களும் பார்க்க உள்ளீடும் பொது சுயவிவரங்கள் என பதில் அளித்து இருக்கிறார். இதையும், எலியட் ஆல்டொர்ஸன் கேள்விக்குட்படுத்தி பல ட்வீட்களை வெளியிட்டு இருக்கிறார்.

கருத்து மற்றும் முரண்பாடுகள் காரணமாக மத்திய ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசின் கீழ் இயங்கும் பல நிறுவனங்கள், அமைப்புகள், உயர்மட்ட அதிகாரிகள் தொடங்கி ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் என லட்சக்கணக்கான பேர் கூ செயலியில் இணைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்ச பேர் கூ செயலியில் இணைந்து உள்ளதாக தரவுகள் கூறுகின்றனர். சர்ச்சையின் எதிரொலியால், தங்கள் நிறுவனத்தின் மற்றொரு செயலியான வோகல் உடைய முதலீட்டில் இருந்து சீன முதலீட்டாளர் விரைவில் வெளியேறுவார் என கூ செயலி நிறுவனர் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்.

Links :

led-by-a-truly-indian-investor-tweets-koo-ceo-aprameya-r-on-funding

Koo has a Chinese investor who is exiting, says founder Aprameya Radhakrishna

Koo app found to be leaking sensitive users data, China connection surfaces

Please complete the required fields.




Back to top button
loader