Factcheck: Pfizer தயாரித்த கொரோனா தடுப்பூசி என வைரலாகும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு பயன்பாட்டுக்கு வந்த Pfizer தடுப்பூசி என இப்புகைப்படம் சமூக வளைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. சிலர் போலியான தடுப்பூசி எனக் கூறி கிண்டலடித்து இப்புகைப்படத்தை பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
கொரோனா வைரஸ் பதிப்பின் அவசர நிலை பயன்பாட்டிற்கு Pfizer-BioTech உடைய கோவிட்-19 தடுப்பூசி அமெரிக்க மற்றும் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைரலாகும் புகைப்படத்தில், ” Made in china ” என சீனாவில் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், Pfizer தடுப்பூசி சீனாவில் தயாரிக்கப்படவில்லை.
மேலும்,” Vaporizer Cartridge ” வடிவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், Pfizer நிறுவனத்தின் இணையதளத்தில் அவ்வாறான எந்தவொரு தகவலும் இல்லை. Vaporizer Cartridge வடிவில் Pfizer விற்பனைக்கு வரவில்லை. இறுதியாக, சிங்கிள் டோஸ் தடுப்பூசி எனக் குறிப்பிட்டுள்ளது ஆனால், Pfizer தடுப்பூசி டபுள் டோஸ் தடுப்பூசியாகும்.
Pfizer நிறுவனம், ” வைரலாகும் Vaporizer cartridge போலியானது ” என Reuter செய்தி தளத்திற்கு இமெயில் மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. உண்மையான Pfizer தடுப்பூசி கையின் மேற்புறம் ஊசியின் மூலம் செலுத்தப்படும் மற்றும் 21 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறையாக செலுத்தப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக அவசரநிலை தடுப்பூசியாக Pfizer நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் கிண்டலாக மீம்ஸ் வைரலாவது போன்று நகைச்சுவையாக தடுப்பூசி குறித்து இப்படியொரு ஃபோட்டோஷாப் புகைப்படத்தை வைரலாக்கி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.