மனுஸ்மிருதியில் சாதி உண்டு.. விளக்கும் அண்ணாமலை !

திமுக எம்பி ஆ.ராசா மனுஸ்மிருதியில் (மனுதர்ம சாஸ்திரம்) சூத்திரர்கள் பற்றி குறிப்பிட்டது தொடர்பாக தெரிவித்த கருத்து பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் சார்ப்பில் ஆ.ராசாவிற்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன.

ஆ.ராசாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ” மனுஸ்மிருதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது. இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்தி மதமாற்றம் செய்வதற்காக அதை மொழிப்பெயர்த்தது வில்லியம் ஜோன்ஸ். இந்து மதம் சாதியை அடிப்படையாக கொண்டது அல்ல. ஆ.ராசாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். திமுக தான் மத அரசியல் செய்கிறது, பாஜக அல்ல. ஆ.ராசாவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம்  நடத்தி குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைப்போம் ” என மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் (13.40வது நிமிடத்தில்) தெரிவித்து இருக்கிறார்.

Archive link 

இந்நிலையில், ” உன் சமூகத்துக்கு, உன் ஜாதிக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் நீ செய்ய வேண்டும் அதுதான் மனு தர்மம் ” என அண்ணாமலை பேசியதாக 13 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

2020 ஜூலை 9-ம் தேதி கேபிஎன் எனும் யூடியூப் சேனலில் அண்ணாமலை பேசிய முழுமையான வீடியோவில்(53:35வது நிமிடத்தில்), ” அறம் என்பது யாரும் புரிந்து கொள்ளாத தமிழில் மட்டுமே உள்ள இருக்கக்கூடிய வார்த்தை. அதை சமஸ்கிருத்தில் தர்மா எனக் கூறுவார்கள். அறம் என்பது தர்மத்தையும் தாண்டிப் போய்விட்டது. 

தர்மம் என்பது மனுஸ்மிருதியில் இருந்து வந்த வார்த்தை. அது என்ன சொல்கிறது என்றால், உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, உனது சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட வேலையை, உனது சாதிக்கு கொடுக்கப்பட்ட வேலையை பண்ணு அதுதான் தர்மம் எனக் கூறும். அதைத்தான் தர்மா என்கிறார்கள்.

ஆனால், தமிழில் அறம் என்பது அதையும் தாண்டிப் போய் விடும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நாம் சொல்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது மனுஸ்மிருதிக்கு முன்னாள் சொல்லப்பட்ட வார்த்தை. அதாவது எல்லா உயிருமே சமம். அற வழியில் வாழ வேண்டும் என்பதே நமது கல்வி ” எனப் பேசி இருக்கிறார்.

வைரல் செய்யப்படும் வீடியோவில் அண்ணாமலை, உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, உனது சாதிக்கு கொடுக்கப்பட்ட வேலையை பண்ணு அதுதான் தர்மம் எனக் கூறுவது மனுஸ்மிருதியில் கூறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து, தமிழில் உள்ள அறத்தை பற்றி பேசுகிறார். ஆனால், அவர் மனுவில் உள்ளதை பேசிய 13 நொடிகள் கொண்ட வீடியோ மட்டும் கட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், அண்ணாமலை பாஜகவில் சேர்வதற்கு முன்னாள் பேசிய வீடியோவின் மூலம், மனுஸ்மிருதியில் சாதி மற்றும் பாகுபாடு இருப்பதையும், சாதிக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்வதையே தர்மம் என மனுஸ்மிருதி கூறுகிறது என்பதையும் அவரே ஏற்றுக் கொண்டு இருக்கிறார். மேலும், மனுஸ்மிருதியை விட தமிழின் அறமே சிறந்தது , அதுவே அனைவரும் சமம் எனக் கூறுகிறது என்பதையும் அண்ணாமலை எடுத்துரைத்து இருக்கிறார் என நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Links : 

Annamalai IPS KBN – Onrupattaal Undru Vazhvu – Program 3

BJP tamilnadu press meet 

Please complete the required fields.




Back to top button
loader